ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 27 செப்டம்பர், 2010

தேவேந்திரர்மறுமலர்ச்சி ஒரு நாள் பயிலரங்கம்

தேவேந்திரர்மறுமலர்ச்சி பேரவை யின்ஒரு நாள் பயிலரங்கம்
இடம். திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி
V.A.O.பயிற்சி மையம் தொடக்க விழா

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன் -இந்துத்துவத்துக்கு விளக்குப் பிடித்த திருமகன்

தேவரின் காலடி மண்ணை எடுத்துக் கும்பிடும் கோடானு கோடி பாசாங்குவாதிகளின் காதில், தேவர் பற்றிய அவ்வளவாய் சொல்லப்படாத விசயங்களைப் போட்டு வைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.



முதலில் காமராஜர் குறித்து, முத்துராமலிங்கத் தேவர் உதிர்த்த பொன்முத்துக்களைப் பார்ப்போமா?


1957 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், காஞ்சிபுரத்தில் பேசிய பேச்சு:- "இற்றைக்கு முதல் மந்திரி என்று சொல்கிற நபர் எல்லாம், அற்றைக்கு நாங்கள் ஏவின வேலையை கேட்டுக் கொண்டிருந்தவர்", என்று ஆணவம் நிரம்பக் கூறினார்.


இதே விசயத்தை, சங்கரன்கோவிலில் இருந்து தேனி வரை எல்லா ஊர்க் கூட்டங்களிலும், முதல்வரை, மரியாதை சிறிதும் இன்றி 'நபர்' என்றோ, காமராஜன் என்றோ, காமராஜ் நாடான் என்றோ தாழ்த்தியே பேசி வந்தார். எல்லா மேடைகளிலும் ஒரு கதை சொல்வார், காமராஜர் குறித்து. அது என்ன கதை?பசும்பொன் உ.முத்துராமலிங்கமே கூறட்டும் கேட்போம்.


"இதே காமராஜ் இற்றைக்கு முதல் மந்திரியாக இருக்கலாம். ஆனால் இதே நபர் பழைய காலத்தில் ஒரு ஓட்டராக இருக்கக்கூட யோக்யதை இல்லாமல் இருந்த தொண்டர். அற்றைக்கு சொத்திருந்தவர்களுக்குத்தான் ஓட்டுரிமை. இவருக்கு சொத்து கிடையாது. ஒரே ஒரு வீடு இருந்தது. அதுவும் அவர் தாயார் பெயரில் இருந்தது. அந்த வீட்டை இவர் பேருக்கு மாற்றித் தரும்படி நான் கேட்டபோது, இவருக்கு ஒரு தங்கை உண்டு. இவருடைய தாயார், "வீட்டில் ஒரு பெண் பிள்ளை இருக்கிறது. அதை நல்ல இடத்தில் கை பிடித்துக் கொடுக்க வேண்டும். ஆகையால் நான் இந்த வீட்டைப் பையன் பேருக்கு மாற்ற முடியாது" என்று சொல்லி விட்டார்கள்.

(இதே கூற்றை "அவன் வேலை வெட்டி இல்லாமல், பொருள் சேர்க்கத் தெரியாமல் ஊரைச் சுத்துகிறவனாயிற்றே. அவனுக்கு வீட்டை எழுதி வைத்து விட்டு பிறகு என்ன செய்கிறது?" என்று காமராஜரின் அன்னை சொன்னதாக சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் 25 பிப்ரவரி 1957ல் தேவர் கூறியுள்ளார்)


அதன் பிறகு நான் என்ன செய்ய வேண்டியிருந்தது என்றால், ஒரு வெள்ளாட்டை வாங்கி, அதற்குக் கட்ட வேண்டிய முனிசிபாலிடி வரியைச் செலுத்தி, தகர வில்லையை வாங்கி, அதனுடைய கழுத்தில் கட்டி,அந்த ரசீதை காமராஜ் கையில் கொடுத்து,ஓட்டர் ஆக்கியவன் அடியேன். இந்த நிலைமையிலிருந்த சாதாரணத் தொண்டர்களை எல்லாம் மனிதத் தன்மைக்குக் (!!!) கொண்டு வந்தவன் அடியேன்."(21/2/57 காஞ்சிபுரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்)


சாதாரணமான தொண்டனாக இருந்த காமராஜை, மனிதத்தன்மை உள்ள மனிதராக இவர் ஆக்கினாராம். என்னதோர் ஆணவப் பேச்சு பாருங்கள்.


அதே கூட்டத்தில் காமராஜரை, காமராஜன் என்றுதான் சொல்லியிருக்கிறார். அப்போதைய காலகட்டத்தில் தமிழ்நாடு காங்கிரசின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் காமராஜர். அவர் தலைமையை, முத்துராமலிங்கத் தேவர் மதிப்பிடும் தரம் எப்படி இருந்தது பாருங்கள்.


"இன்றைக்கு மாகாணக் கமிட்டியில் எவனெவனோ வந்து விட்டான்.இற்றைக்கு காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ. தேர்தலுக்கு 'நாமினேஷன்' போடுகிறவன் கேட்கிறான். "திலகர், காந்தி மகன் தானே" என்று.இப்படிப்பட்ட அறிவாளிகள் வந்து விட்டார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் சபையில் காமராஜின் புண்ணியத்தால்."


கல்வியைப் பரவலாக்கிப் பணியாற்றிய காமராஜரினை, ராஜாஜியுடன், தேவர் ஒப்பிட்டதைப் பார்ப்போம். "அவர் மிதவாதியாக (ராஜாஜி) இருந்தாலும், காமராஜ் போல தற்குறி அல்ல. பழங்காலத்தில் எம்.ஏ. எல்.டி., பி.ஏ. எல்.டி. பட்டம் பெற்றவர்கள் ஆண்டார்கள். இற்றைக்கி எம்.ஏ.,பி.ஏ. இல்லாது வெறும் எல்.டி.க்கள், அதாவது 'லெப்ட் தம்ப்' இடது கைப்பெருவிரல் பிரட்டுகிறவர்கள் ஸ்தானம் பெற்றிருக்கிற காலம்."


காமராஜ், வறுமையின் காரணமாய்ப் பள்ளிப்படிப்பைத் தாண்டவில்லை, என்பதனை நாடறியும். இதனால் என்ன குறைந்தது, அவரின் திறமைக்கு? தேவர், இதனைக் கூட கேவலமாகப் பேசித் தன் பெருந்தன்மையை உலகுக்குப் பறைசாற்றியிருக்கிறார். (இதனைச் சொன்ன தேவரோ, எஸ்.எஸ்.எல்.சி.யே தாண்டவில்லை என்பது இன்னும் சிறப்பு).


குலக்கல்வித் திட்டம் கொண்டுவந்து தமிழர்கள் கல்வியில் மண்ணள்ளிப்போட சூதறிஞர் ராஜாஜி முனைந்தபோது, காங்கிரசுக்குள்ளேயே எதிர்ப்பு வலுத்து, குல்லுகப் பட்டர், பதவி விலகி, காமராஜர் முதல்வரானார். அச்சூழலை விவரிக்க வந்த தேவர் சொல்கிறார், காஞ்சி தேர்தல் பிரச்சாரத்தில் - "பிளாக் மார்க்கெட்காரர்களுக்கு புரோக்கராக நின்ற காமராஜர் பிரதம மந்திரியாகிறார்." (அப்போது, மாகாண முதல்வர்களை, பிரீமியர்-பிரதமர் என்று சொல்வது வழக்கம்)


காமராஜரை ஆதரித்த காங்கிரஸ் தலைவர்களிடம் தேவர் சொன்ன கருத்து "உங்களுக்கு அவர் பிரதமராகத் தோன்றலாம். எனக்கு அவருடைய பழைய மார்க்கெட் வேல்யூ தெரியும். ஒழுக்கத்தின் பெயரால், அறிவால்,தியாகத்தால் பதவிக்கு வருகிறவர்களைத்தான் நான் மதிக்க முடியும். சந்தர்ப்பத்தின் பெயரால் முன்னுக்கு வருகிறவர்களை நீங்கள் மதிப்பதாக இருந்தால் நான் என்ன செய்ய முடியும்?".


சற்றே யோசித்துப் பார்ப்பின் தேவர் குறிப்பிட்ட மார்க்கெட் வேல்யூ என்பது, ஜாதிப் படிநிலைதான் என்பது தெள்ளெனப் புரியும்.


முதல்வராகும் முன் ஆசீர்வாதம் வாங்க வந்த காமராஜரிடம் இவர் சொல்கிறார் "நீ பிரதமர் ஆவதன் மூலம் காங்கிரஸ் கெடும். நீ மாகாணக் கமிட்டித் தலைவனாக (தலைவராக அல்ல-அழுத்தம் எம்முடையது) இருந்து கொண்டு யாரேனும் நல்லவரைப் பிரதமராக்கி, உன்னுடைய அதிகாரத்தைச் செலுத்து. உனக்கு வர வேண்டிய லாபம் வரும்".


அதே காஞ்சிக் கூட்டத்திலே, தேவர், காமராஜர் மீது ஓர் அபாண்டப் பழியைப் போட்டார். அது என்ன பழி? "பழைய காலத்தில் காங்கிரஸ் காரன் போட்டது கள்ள ஓட்டு. இப்போது காமராஜ், கள்ள நோட்டு அச்சடிக்கிற காரியத்தில் ஈடுபட்டிருக்கிறார்", " ஏற்கெனவே விருதுநகர் நாடார் ஒருவர் நான்கு லட்ச ரூபாய் கள்ள நோட்டை அள்ளிக் கொண்டு,திருவெற்றியூருக்கு வந்திருந்தபோது கைது செய்யப்பட்டார். இப்பேர்ப்பட்ட யோக்யதை அற்ற காமராஜ் கும்பலைத் தேர்ந்தெடுப்பது உங்களுக்கு நல்லதல்ல".


காமராஜர், சாகும்போது அவர் வீட்டில் நூற்றிச் சொச்சம் ரூபாய் மட்டுமே இருந்தது என்பதை நாம் அறிவோம். நேர்மையாய், எளிமையாய் வாழ்ந்த அத்தலைவரினைத் தரம் தாழ்த்தி, இவ்வாறு பழி போட்டு, காஞ்சியில் மட்டுமல்ல, எல்லா ஊர்களிலும் கள்ளநோட்டுப் பேர்வழி என்று புழுதிவாரித் தூற்றியவர், தேவர்.


கம்பம் தேர்தல் கூட்டத்திலே, 24 பிப்ரவரி, 1957ல் மீண்டும் அதே பழியைப் பின்வருமாறு சொல்கிறார்."இன்று கள்ள நோட்டு அடிக்கும் நாடாரின் ஆட்சி இந்த நாட்டிலே நடைபெறுகிறது" "என் மீது கேஸ் போட்டால் இந்தக் கள்ள நோட்டு அடிக்கும் நாடாரின் அயோக்கியத்தனத்தைச் சாட்சி மூலம் நிரூபிக்க ரிக்கார்டு இருக்கிறது".


இக்கூட்டத்திலே, காமராஜரின் படிப்பறிவை மறுபடியும் கொச்சைப்படுத்தி "எம்.ஏ. படித்தவர்கள் ஆண்ட நாட்டிலே எல்.டி. பதவிக்கு வந்து விட்டார்கள். இந்த அளவுக்கு மானம் கெட்டு வந்திருக்கிறது. இப்படி மானம் கெட்டு இருக்கிற காரணத்தினாலேயே இந்த நாட்டிலே காரியங்கள் மிகத் தாழ்ந்த நிலைமைக்கு வந்திருக்கிறது."

(இதே காலகட்டத்தில் மதுரை தமுக்கத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் தேவருக்கு, குறும்பாய் ஒருவர் துண்டுச்சீட்டில் "நாடார், நாட்டை ஆள்வார்" என்று எழுதிக் கொடுத்து இருக்கிறார். தேவரய்யா டென்ஷனாகி விட்டார் "நாடார், பனையை ஆள்வார், தென்னையை ஆள்வார், நாட்டை ஆளமுடியாது" என்று பச்சையாய் சாதிவெறி கக்கினாராம். தூத்துக்குடி அருகில் உள்ள குருக்குச்சாலையில் நடந்த தேர்தல் கூட்டத்தில், உரை முழுவதும் காமராஜரை 'சாணாப் பயலே' என்று திட்டியே பேசியிருக்கிறார்.)


இதே கம்பம் கூட்டத்திலே, காமராஜரைக் கொச்சைப்படுத்தி ஒரு சம்பவத்தை, தேவர் சொல்லி இருக்கிறார்.


"வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு வந்தவர்களுக்கு, முனிசிபல் கவுன்சிலர்கள் வரவேற்புக் கொடுத்தார்கள். அந்த வரவேற்பில், காமராஜூம் கலந்து கொண்டார். யார் இந்த நாட்டு முதல் மந்திரி என்பதைத் தெரிந்து கொள்வதற்காக வெளிநாட்டுக்காரர்கள் சுற்றிச் சுற்றிப் பார்த்தார்கள். அறிவாலோ, பேசும் திறத்தாலோ, அல்லது நடையுடை பாவனையாலோ பார்த்துத் தெரிந்து கொள்ள முடியவில்லை. உடனே ஒரு வெள்ளைக்காரன், "சென்னையின் முதல் மந்திரி யார்?" என்று கேட்டார். இந்த நாடார் சும்மா இருந்தால் செக்கரட்டரி சொல்லியிருப்பான் அல்லது தமிழிலே பேசியிருந்தால் தேச அவமானம் என்று நினைத்திருப்பான். தன் அறிவைக் காட்டத் தெரியாத ஒருவர், இந்த நாட்டு முதல் மந்திரியாக இருக்கிற இந்த அலங்கோலத்தினால் நாடு அவலட்சணமாகக் கேவல நிலை அடைந்தது. தமிழ்நாடு தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழ்நாடு அன்று அவமானப்பட்டது."

(இதே சம்பவத்தை இன்னும் விரிவாக்கி "அந்தக் கேள்விக்கு தமிழிலேயே பதிலளித்து இருக்கலாம். அப்படிச் செய்யாமல், அவருக்கு ஆங்கிலத்தில் இருக்கும் அறியாமையை எடுத்துக் காட்டுமளவில் "I is the Chief" என்று சொல்லியிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு ஆள் முதன்மந்திரியாக இருக்கிறான் (இருக்கிறார் அல்ல- அழுத்தம் எமது) என்று அவர்கள் நினைத்திருக்கிறார்கள்" என சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் 25 பிப்ரவரி 1957ல் தேவர் கூறியுள்ளார்)


ஈயத்தைப் பார்த்து இளித்த பித்தளையின் கதை இது. காமராசர், சுய சாதி வெறியுடன் ஆட்சி செய்கிறார் என்று, இந்த சாதி ஒழிப்புப் போராளி, அதே சங்கரன் கோவில் கூட்டத்திலே சொல்கிறார் "சர்க்கார் உத்தியோகங்களை அவருடைய ஆட்களுக்கே கொடுத்து வருகிறார். பிளாக் மார்க்கெட்டு வியாபாரத்தையும் அவருடைய ஆட்களே செய்து வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் மறைமுகமாக ஆதரவு கொடுத்து வருகிறார் இந்த காமராஜர். தமிழ்நாட்டின் நிர்வாகத் தரம் குறைந்து போய் விட்டது."


மார்ச் 1, 1957 இல் சிறீ வில்லிபுத்தூர் தேர்தல் கூட்டத்திலே, மக்களுக்கு தேவரய்யா நாகரீகமாக ஒரு அழைப்பு விடுக்கிறார் - "அரசியல் சரித்திரத்திலே இப்படி மானம் கெட்டவன் பிரதம மந்திரியாக இருந்தது கிடையாது. விருது நகர் வியாபாரி சமாச்சாரம் தெரிஞ்ச ரகசியமில்லே. இதை மறைக்கலாமா? இற்றைக்கு அரசியலையும் அப்படி கெடுக்கப் பார்க்கிற. பத்து வருஷமா இப்படித்தானே அரசியலிலே காலம் தள்ளினே. இனிமேலும் நடக்க விடுவோமா? எவ்வளவு சீக்கிரம் இந்த நாடார் பதவியை விட்டுப் போறாரோ அவ்வளவுக்கவ்வளவு அவருக்கு நல்லது. நாட்டுக்கும் நல்லது."


இம்மானுவேல் சேகரன் கொலைச் சதி வழக்கில் இருந்தில் தப்பிய தேவர், 1962 இல் மதுரையில் நடந்த தேர்தல் கூட்டத்தில் கூட, முதல்வர் காமராஜருக்கு ஆதியிலே சோறு போட்டது நானாக்கும் என்கிற ரேஞ்சுக்கு அல்பத்தனத்தைக் காட்டி இருக்கிறார் "நம்மால் உணவு கொடுத்து, உடை கொடுத்து, உறைவிடங் கொடுத்து வளர்க்கப்பட்ட புண்ணியவான்களாலேயே கொலைக் குற்றம் சாட்டப்பட்டேன்" என்றார்.


காமராஜரின் மதிய உணவுத் திட்டம், பல தரப்பு ஏழைக் குழந்தைகளையும் கல்விச்சாலை நோக்கி வர ஊக்கப்படுத்தியது என்பதை முந்தைய இரண்டு, மூன்று தலைமுறை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். 1962லே அந்த மதிய உணவுத் திட்டத்தை தேவர் மதிப்பிடும் லட்சணம் இதுதான் "மதிய உணவுத் திட்டம் என்பதன் பெயரால், பிள்ளைகளின் படிப்பு பாழாக்கப்படுகிறது. உபாத்தியாயர்கள் மதிய உணவுத் திட்டத்திற்கு அரிசிப் பிச்சை எடுக்கப் போக நேர்வதால், பிள்ளைகள் படிப்பு நாசமாகி தேசத்தின் எதிர்காலம் அறிவுச் சூன்யத்துக்குத் தயாராகிறது."

******************
இமானுவெல் படுகொலையும், சாதி வெறியும்:


1957 முதுகுளத்தூர் கலவரமும், அதனைத் தொடர்ந்து அரசின் முயற்சியினால் கூட்டப்பட்ட சமாதானக் கூட்டமும், அதற்கடுத்து மிகப்பெரிய சாதி வெறிப் படுகொலைகளை ராமநாதபுரம் மாவட்டத்தில் உண்டாக்கியது.


இந்தக் கூட்டத்தில், 'இம்மானுவேல் சேகரனும், தானும் சமமாக நாற்காலியில் உட்காருவதா?' எனும் உணர்வில், தேவர் உட்காராமல் நின்று கொண்டிருந்தார். (சட்ட சபையில் பி எஸ் சந்தானம் பேசியதில் இருந்து) சமாதானக் கூட்டத்தில் தலித்களின் தலைவரான இம்மானுவேல் சேகரனும், தேவர்களின் தலைவரான முத்துராமலிங்கமும் ஓர் சமாதான அறிக்கையில் கையெழுத்துப் போட்டு அதை மக்களுக்கு 'அமைதி திரும்பிட'வேண்டுகோளாக வைக்கலாம் என கலெக்டர் முன்கை எடுத்தார். இம்மானுவேல் சேகரன் ஒத்துக் கொண்டு கைஎழுத்திட முன் வந்தபோது, இம்மானுவேலை, தமக்கு இணையான தலைவராகவோ, தலித்களின் தலைவராகவோ தம்மால் ஏற்க முடியாது என்று சொன்னார் தேவர்.


"என் அளவு நீ பெரிய ஆளாக, பெரிய தலைவனாக ஆகி விட்டாயா? உன்னோடு சேர்ந்து நானும் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட வேண்டுமா?" எனச் சொல்லி, தேவர் கையெழுத்திட மறுத்துவிட்டு, வெளியே வந்து தாறுமாறாக தம் தொண்டர்களிடம் பேசிடவே, அடுத்தபடியாக இம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்க போலீசார், கீழத்தூவல் ஊருக்குள் நுழைந்தபோது, போலீசாருக்கும், அங்கிருந்த மறவர்களுக்கும் மோதல் ஏற்பட்டு, போலீசின் துப்பாக்கிப்பிரயோகத்தில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உடனே எதிர்க்கட்சிகள் காமராஜ் ஆட்சி மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தன.


அத்தீர்மான விவாதத்தின்போது, அமைச்சர் பக்தவச்சலம் தாக்கல் செய்த அறிக்கையில் தேவர் அவர்கள் இம்மானுவேலைக் குறித்து என்ன பேசினார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அது - "(சமாதான) மகாநாட்டிலிருந்து வெளியே வரும்போது சிறீ முத்துராமலிங்கத்தேவர், இம்மானுவேல் போன்ற பள்ளன் கூட எதிர்த்துப் பேசும்படியாக விட்டு விட்டீர்களே! என்று தம் ஆதரவாளர்களைக் கடிந்து கொண்டார்". கடிந்து பேசிய அக்கோபமே, இம்மானுவேலை வெட்டிப் போட்டது.


அதனை அடுத்து மூண்ட கலவரத்தின்போது கொண்டலாதி எனும் ஊரில் தலித் மக்கள் குடிநீர் கோரும் கிணற்றில் மண்ணெண்ணெய்யும், மனித மலமும் கொட்டப்பட்டன. தேவமார்கள் தன் சாதி மக்களை அடையாளம் கண்டு கொள்ள மஞ்சள் வேட்டி அணிந்து கொண்டு வேல் கம்புடன் போருக்கு செல்வது போன்று கும்பலாய் சென்று தலித்களின் வீடுகளையும், வைக்கோல் போர்களையும் கொழுத்தினர். 8 ஊர்களில் பெண்களைக் கற்பழித்தனர். பல ஊர்களில் தலித் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக விடப்பட்டனர்.


இது சமயம், தேவர், மதுரை கோரிப்பாளையத்தில் தற்போது அவரின் சிலை அமைந்திருக்கும் இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதை விளக்கிய அரசுக் குறிப்பு (நாள் 28/09/1957) கூறுவதாவது:- "ராமநாதபுரம் கலெக்டர் முதுகுளத்தூரில் 10.09.1957 அன்று கூட்டிய அமைதி மாநாட்டில் முத்துராமலிங்கத்தேவரும் கலந்து கொண்டார். ஹரிஜனங்கள் சார்பில் அந்த மாநாட்டில் பேசிய இம்மானுவேல் என்பவரது தலைமை குறித்து அவர் (முத்துராமலிங்கத் தேவர்) கேள்வி எழுப்பினார். அந்த மாநாட்டில் தமக்கு இணையான அளவில் ஓர் ஹரிஜன் முன்வரிசைக்கு வந்து பேசியது தம்மை அவமதித்ததாகும் என்று அவர் (முத்துராமலிங்கத் தேவர்) கருதினார். இம்மானுவேல் அந்த அளவுக்கு முக்கியத்துவம் அடையுமாறு நீங்கள் ஏன் அனுமதித்தீர்கள்? என்றும், தமக்கு நேர்ந்த இந்த பகிரங்க அவமானம் குறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்றும் முத்துராமலிங்கத் தேவர் மாநாட்டிலிருந்து வெளியே வந்த பிறகு, தமது சீடர்களைக் கேட்டார். அதற்கு அடுத்த தினமே, முத்துராமலிங்கத் தேவரின் சீடர்கள் அடங்கிய ஒரு கும்பல் இம்மானுவேலை மறைந்திருந்து தாக்கிக் கொலை செய்தது. "முத்துராமலிங்கத் தேவருக்குச் சவால் விடுவதற்கு உனக்கு என்ன தைரியம்? என்று கொலையாளிகளில் ஒருவர் இம்மானுவேலை வெட்டியபோது கேட்டார்."

(தலித்களுக்குத் தாம்தான் தலைவர் என்றும், தானே பல தலித்களுக்கு உதவி செய்திருப்பதாகவும், இம்மானுவேலை அவர்களின் தலைவராகத் தன்னால் ஏற்க இயலாதென்றும் தேவர், அக்கூட்டத்தில் கூறி இருந்தார். சாதி இந்து மனதில் ஆண்டாண்டு காலமாய் வேரோடிய சாதி வெறிதான் தலித்தின் தலைமைத்துவத்தை ஏற்க மறுக்கிறது. இதே போன்று தான், வட்ட மேஜை மாநாட்டில் அம்பேத்கரை, தீண்டப்படாதவர்களின் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாதென்று காந்தி வாதிட்டார். சென்ற சட்டசபைத் தேர்தலில், திமுகவின் சாதி இந்துக்கள், கூட்டணியில் இருந்த தலித் கட்சியினரைத் தோற்கடித்தனர்.)


இம்மானுவேல் கொலை வழக்கில் பெருமாள் பீட்டர் என்பவரது சாட்சியம் மிகவும் முக்கியமானது. அப்போது 88 வயதை எட்டியிருந்த பேரையூரைச் சேர்ந்த அவரின் சரித்திரம் சில ஆண்டுகளுக்கு முன்பு தலித் முரசில் வெளிவந்துள்ளது.


நீதிமன்ற விசாரணையில் பீட்டர், தேவருக்கு எதிராக சாட்சி சொன்னார் "ஒரு ஹரிஜன இளைஞர் நம்மை எதிர்த்துப் பேச விட்டு விட்டீர்களே! நீங்கள் மறவர்களா? என்று தமது ஆதரவாளர்களிடம் முத்துராமலிங்கத் தேவர் கூறியதை நான் கேட்டேன்" என்றார் அவர்.


கீழத்தூவல் துப்பாக்கிச் சூட்டில் 5 மறவர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, காமராஜர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தது. அத்தீர்மானத்தின் மீதான விவாதம், தேவரின் பல பரிமாணங்களை சட்டசபைக் குறிப்பேடுகளில் பதிய வைத்துள்ளது. இனி, சட்டமன்றக் குறிப்பேடுகள் பேசட்டும்.



உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் 26 அக்டோ பர் 1957 அன்று தாக்கல் செய்த அறிக்கையில் இருந்து:

"..The Government received petitions alleging several cases of lawlessness as a result of the inflamatory speeches by Sri.Muthuramalinga Thevar, inciting his followers to harass Nadars and Harijans...."


கலவரத்தை நிறுத்திட கூட்டப்பட்ட சமாதான மாநாடு பற்றி அந்த அறிக்கை பின்வருமாறு சொன்னது:

"Recognized leaders of the different communities were invited to attend this Conference. It is on record, Sir, that Sri Muthuramalinga Thevar who attended the Conference questioned the leadership of one Sri Emmanuel, Leader of the Local Depressed Classes League, who was representing the Harijans, Sri Thevar is reported to have asked Emmanuel whether he could pose as a Leader of the same stature as Sri Thevar, and whether his assurances on behalf of the Harijans were worth having."


"It is also learnt, Sir, that while coming out of the Conference, Sri Muthuramalinga Thevar chided his followers for allowing even Pallans like Emmanuel to talk back to him. The very next day, Sri Emmanuel was brutally murdered at Paramakudi."


முதுகுளத்தூர் பிராந்தியத்தில் ஜாதிக் கலகத்தை விதைக்க வெறியூட்டும் பேச்சை எங்கெல்லாம் தேவர் பேசினார் என்பதை அவ்வறிக்கை பட்டியலிட்டது - இவ்வாறு: "On 16th September 1957 addressing a public meeting at Vadakkampatti, Sri Thevar refered to the communal strife raging in Mudukulathur and Paramakudi areas. Obviously the reference was to the incidents which had occured at Arunkulam, Keelathooval, Veerambal, Ilanjambur, Irulandipatti and Sandakottai between 10th and 16th September 1957".


கீழத்தூவலில் இம்மானுவேலைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்கப்போன போலீசாருடன் மோதிய மறவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைப் பற்றி விசாரிக்க அனுப்பப்பட்ட எஸ்.வெங்கடேஸ்வரன் I.C.S. முன்பு ஆஜராக வந்த மக்களை மிரட்டும் வகையில் தேவர், தனது காரினை விசாரணை நடந்த இடத்துக்கெதிரில் நிறுத்தி வைத்து அந்தக் காரிலே அவர் இருந்த செயலையும் பக்தவச்சலத்தின் அறிக்கை அம்மணமாக்கியது.


"In connection with the enquiry by Sri. S. Venkateswaran I.C.S. into the Police firing at keelathooval village through Sri Thevar had orally announced that he and his party would not take part in the enquiry, he seated himself in a car at the entrance of the building where the enquiry was held. This had the effect of preventing witness coming forward to tender evidence which might clash with Sri. Thevar's contentions."


திமுக உறுப்பினர் டாக்டர் சத்தியவாணிமுத்து அம்மையாரின் பேச்சில், 1937 தேர்தலில், ஜஸ்டிஸ் கட்சி வேட்பாளரான ராமநாதபுரம் அரசரை எதிர்த்து நின்றபோது தனக்கு வாக்களிக்காத ஹரிஜனங்களுக்கு அவர் (தேவர்) செய்த பயங்கரக் கொடுமைகள் குறித்தும், அதற்காக அவர் மீது மதுரை அடிஷனல் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்த விசாரணையும் வெளிப்பட்டது. டெபுடி தாசில்தார் சிதம்பரம் முதலியாரின் கால் வெட்டப்பட்டதும், சப்-மாஜிஸ்திரேட் ஒருவர் கொல்லப்பட்டதும் தேவரின் தூண்டுதலால் நடந்தது என்பதும் சட்டமன்ற விவாதத்தின்போது வெளியானது.


திமுக எம் எல் ஏ அண்ணாதுரை பேசும்போது 'முத்துராமலிங்கத் தேவர் 1933ஆம் வருஷத்திலிருந்தே பாண்டிய மண்டலத்தில் சாதித் துவேஷம் வளர்க்கக் கூடிய வகையில் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறார்' எனக் குறிப்பிட்டார்.


முதுகுளத்தூர் கலவரத்தில் ஆதிக்க சாதி வெறி தேவர்களிடம், வெட்டுப்பட்டு சாகும்போது கூட தலித்களை சிக்கலில் மாட்டி விட்டு சாகும் அளவிற்கு சாதி வெறி உச்சத்திற்குப் போய் இருந்தது. கலவரத்தில் வெட்டுப்பட்டு சாகப்போகும் சமயத்தில் முத்துராமன் சேர்வை என்ற மறவரிடம் மரண வாக்குமூலம் பெறப்பட்டது. ஒரு மனிதன் சாகும்போது சொல்லும் வார்த்தைகள் பொதுவாக உண்மையாக இருக்கும் என்பது உலகத்தாரிடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. முத்துராமன் சேர்வையின் மரண வாக்குமூலத்தை அன்றைய உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் வெளியிட்டார் " நான் ஒரு அரிஜன். அரிஜன வீட்டை நானே கொளுத்தினேன்". அந்த நபர் செத்த பிறகு, பிணத்தை வாங்க வந்தவர்களோ மறவர்கள். இவ்வாறெல்லாம் சாகும்போது கூட ஒருவன், தலித்களை சிக்கலில் மாட்டி விட்டு சாகும் படி, சாதி வெறியேற்றிவிடும் அளவிற்கு அவர்களின் அன்றைய தலைவர் இருந்தார்.


முதுகுளத்தூர் கலவரம் ஆரம்பமாகும் முன்,முத்துராமலிங்கத் தேவர், தன் சாதி மக்களிடம், "தேவர்கள் தேவர் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்க வேண்டுமென்றும்","நாடார் கடைகளைப் புறக்கணிக்க வேண்டுமென்றும்" கூறி இருந்தார். இப் பேச்சு, ராம.கோபாலன் வெறியேற்றிவிடும் "இந்துக்கள், இந்துக் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்க வேண்டும்" எனும் பேச்சுடன் மிகச் சரியாகப் பொருந்துகிறது.

**********************
கேப்பை, நெய், கேனைப்பயல்கள் மற்றும் தேவர்:


இரண்டாம் உலகப் போரில் மர்மமான முறையில் மாண்டுபோன நேதாஜியை, 'அவர் சாகவில்லை, மறைவாய் வாழ்கிறார்' என்று கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வதந்தி ஒன்று மக்களிடையே பரவி இருந்தது. அதனை ஊதி ஊதிப் பெருக்கி விட்டவர்களில் தேவரும் ஒருவர். தாம், 1950 இல் கொரியப் போரின்போது கொரியா சென்றிருந்ததாகவும் அப்போது நேதாஜியை சந்தித்ததாகவும் கூறிவந்தார். வட தென் கொரியப் போரில் நேதாஜி பங்கெடுத்ததாகவும், தேவரும் அப்போரில் ராணுவப் பயிற்சி எடுத்ததாகவும் சொல்லிக் கொண்டிருந்தார்.


அவருடைய பேச்சுக்கள் பல இடங்களில், எதைச் சொன்னாலும் மக்கள் நம்பி விடுவார்கள் எனும் அதீத நம்பிக்கையால் வெளிப்பட்டிருக்கும்.


உதாரணமாக ஒரு கூட்டத்தில் தேவர் "வரும் அக்டோ பர் 28 அன்று யாம் செந்திலாண்டவருடன் சேவற்கொடியேற்றி, வேல் கைப்பிடித்து, மயிலாசனத்தில் வானத்தில் தரிசனம் கொடுப்போம். அப்பொழுது, சென்னை செண்ட் ஜார்ஜ் கோட்டையில் குண்டு வீசி, காமராஜரைக் கைது செய்வோம். பின்னர், டில்லி செங்கோட்டையில் குண்டு வீசி, நேருவைக் கைது செய்வோம்" என்று பேசியதையும்,


"இதோ 50 லட்சம் பேர் கொண்ட படையுடன் நேதாஜி வருகிறார்" என்றும், "திபெத்தில் நேதாஜி நுழைந்து விட்டார்" என்றும்,
"நேபாளில் சுதந்திர சேனை", "சிங்கியங்கில் நேதாஜி" என்றெல்லாம் அளந்து வந்ததையும் என்.ஆர்.தியாக ராஜன் எனும் எம் எல் ஏ சட்டசபையில் பேசி இருக்கிறார்.


"மடியில் அணு குண்டு(??) வைத்திருப்பதாகவும்", "மூன்றாம் உலக யுத்தத்தை முதுகுளத்தூரில் ஆரம்பிப்பேன்(!!!)" என்றும் மேடையில் முழங்கிய தேவரின் பல சவடால்கள் விநோதமாய் இருக்கும்.


"மாக்னெட் நோஸ் (காந்தக் கருவி) ஒன்றை வைத்து சமுத்திரத்தில் உள்ள தண்ணீரையெல்லாம் பனிக்கட்டி ஆக்கி விட முடியும், அதனால் கப்பல்கள் எல்லாம் அங்கங்கே ஸ்தம்பித்துப் போய்விடும் , இதன் மூலம் இங்கிலாந்து அமெரிக்கா சீனா ஆகிய நாடுகளை எல்லாம் நாம் பிடித்து விடலாம்" என்றும் சொன்ன தேவர், இப்படியாப்பட்ட மாக்னெட் நோசை, தன் மடியில் கட்டி வைத்திருப்பதாகவும் சொன்னதுதான் விசேசம்.


இம்மாபெரும் தலைவர், பல முறை மக்களால் பயம் கலந்த பக்தியுடன் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், தொகுதி மக்களுக்கு நலத்திட்டங்கள் செய்யப்படுவதை எதிர்த்தவாறுதான் இருந்து வந்துள்ளார்.


காமராஜரின் காலகட்டத்தில் பட்டி தொட்டி எல்லாம் பள்ளிக்கூடங்கள் பெருகியபோது "பள்ளிக்கூடம் எல்லாம் வந்தா எல்லா சாதிப்பயலுகளும் படித்து விட்டு, டவுனுக்குப் போயி இங்கிலீஷ் படித்து விட்டு, நம் ஜாதி ஆட்களுக்கு மரியாதை தராமல் இருப்பார்கள்" என யூகித்து, பள்ளிகள் வருவதை எதிர்த்து வந்தார்.


சட்ட மன்ற உறுப்பினர் சிதம்பர பாரதியின் சட்டமன்ற உரை "அங்கே ரோடு வசதியைப் பெறுவதற்கு முயற்சி செய்யலாம் என்று கூறினால், "இல்லை. ரோடு வேண்டாம். ரோடு வந்தால் ரொம்ப ஆபத்து. நாங்கள் ஏதாவது கோபத்தில் சண்டையிட்டு அடித்துக் கொள்வோம். உடனே போலீசில் புகார் கொடுக்க மாட்டோ ம். பிறகு 4,5 நாட்கள் ஆனவுடன், நாங்களே பஞ்சாயத்து பண்ணிக் கொள்வோம். ஆகவே ரோடு வந்தால் ரொம்ப ஆபத்தாகிவிடும்" என்று தேவரின் ஆதரவாளர்கள் சொல்லியதிலிருந்தே, அவர் தொகுதியில் நடைபெற்ற வளர்ச்சிப் பணியின் யோக்யதை தெரிந்திருக்கும்.

*****************
இந்துத்துவத்திற்க்கு விளக்கு பிடித்த கதை:


தேவரின் பல கருத்துக்கள், இந்து மதவெறிக் கட்சியினரின் கருத்துக்களோடு ஒத்துப் போகின்றன.
"அரசியலுக்கு வரும்போது 'அரசியல் வேறு மதம் வேறு. இரண்டையும் சேர்த்துக் குழப்புகிறார்கள்' என்ற பேச்சு நடைபெறுகிறது. அரசியல் இல்லாமல் மதமில்லை. மதமில்லாமல் அரசியல் இல்லை. மதம் இல்லாத தேசம், வேரில்லாத மரம் போல. எந்தக் காற்றிலும் விழுந்து விடும்" என்றும் "இங்கே மதமும், அரசியலும் சேரக் கூடாதென்று சொல்லி இங்கிலீஷை காலேஜில் சொல்லிக் கொடுத்துக் கெடுத்தான்" என்றும் 1957 காஞ்சிபுரம் கூட்டத்தில் கூறி இருக்கிறார்.


"சுதந்திரம் வாங்கிய பிற்பாடு நாட்டில் ஏற்பட்ட நிலைமை என்ன? பாகிஸ்தானிலே மாட்டிக் கொண்ட 1 1/2 கோடி மக்களின் கதி என்ன ஆயிற்று? அவர்கள் நடுச்சந்தியிலே நிறுத்தப்பட்டார்களே? சொத்தை இழந்து, வாழ்க்கை நிலைமை இழந்து, மனைவி மக்களை இழந்து அலறித் துடித்தார்களே? அதற்காக இங்கே இருக்கும் முஸ்லீம்களைப் பாகிஸ்தான் ஓடு என்று ஆச்சாரியார் கோஷ்டி (சூதறிஞர் ராஜாஜி-அழுத்தம் எமது)யால் விரட்ட முடிந்ததா? அல்லது அவர்களைத்தான் நீங்கள் "பாகிஸ்தான் பிரஜை போ" என்று சொல்ல முடிந்ததா?" என்று பால் தாக்கரே, அத்வானி போன்ற பாசிஸ்ட்கள் போன்று தேவர், சட்டசபையில் 1952 ஜூலை 3 ல் பேசி இருக்கிறார்.


கோல்வால்கர், இந்து மகாசபைத்தலைவர் மதுரைக்கு வந்தபோது அவருக்கு பணமுடிப்புக் கொடுத்து சிறப்பு செய்ய ஏற்பாட்டை செய்தவர், முத்துராமலிங்கத் தேவர் ஆவார். அதற்காக அவர் சொன்ன காரணம்-"ஹிந்து மதத்தின் விரோதி மகாத்மா காந்தி. ஆதலால் தான் நான் கோல்வால்கர் அவர்களுக்குப் பண முடிப்புக் கொடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இசைந்தேன்."


காங்கிரசு உறுப்பினர் சுவாமி சகஜானந்தாவின் பேச்சில் வீராம்பல் ஊரில் நடந்த இரட்டைக் கொலைக்கான (கொல்லப்பட்டவர்கள் தலித்கள்) வேறொரு காரணம் வெளிப்பட்டது."வீராம்பலில் எப்படிப்பட்ட அக்கிரமங்கள் நடந்திருக்கின்றன? அங்கே இரண்டு ஹரிஜனப் பையன்கள், தாங்கள் முஸ்லீம் மதத்தில் சேர வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். உடனே அவர்களுடைய பிரசிடெண்டையும் செக்ரெட்டரியையும் கொலை செய்து விட்டார்கள்".

****************
சட்டசபை உறுப்பினர் டி.எஸ்.ராமச்சந்திரன் (1957-62ல் உறுப்பினர்) முதுகுளத்தூர் பிராந்தியத்தில் பயணம் செய்தபோது, மறவர் குலப் பெண்கள், அவரிடம் கேட்ட கேள்வி "ஹரிஜனங்கள் முக்குலத்தாரைப் பெண் கேட்க வந்தார்களாமே? பெண் கேட்க வருவதற்கு அத்தனை துணிச்சலா?" என்பதாய் இருந்தது. இது அப்போதைய கலவரத்தில் பொது மக்களிடையே பரப்பப்பட்ட வதந்திகளில் முக்கியமான ஒன்று. அச்சம்பவத்திற்கு இது வரை ஆதாரம் ஏதும் கிடைக்காதபோதும், ஜாதி இந்து மக்கள் அவ்வதந்தியை இன்னமும் எளிதில் நம்பி உணர்ச்சி வசப்பட்டு, சாதிக் கலவரத்திற்கு தயாராகி விடுகின்றனர்.


அப்படி என்ன வதந்தி அது?
தேவரும், இம்மானுவேல் சேகரும், சமாதானக் கூட்டத்திற்கு வந்தபோது, இம்மானுவே, தேவர் முன்னால் சிகெரெட் பிடித்தபிடி, கால்மேல் கால் போட்டபடி சரி சமமாய் அமர்ந்தாராம். உடனே தேவரய்யாவுக்கு ஜிவ்வென்று கோபம் ஏறி "..க்காளி.. இவனுக எல்லாம் நம்ம கூட சரி சமமா வந்திட்டானுங்க.." என்றாராம். இது இம்மானுவேல் காதில் விழுந்ததும், அவரது ஆதரவாளர்களுடன் பழம்,பூவுடன் சென்று தலித் பையன் ஒருவருக்கு, தேவர் வீட்டுப் பெண்ணைக் கேட்டனராம். காரணம், தேவரே, இம்மானுவேலிடம், மைத்துனனிடம் பேசிடக்கூடிய வசைச்சொல்லான '..க்காளி' என்பதனைப் பேசினாரே என்பதாம்.


கலவரத்தில் எண்ணெய் வார்க்க இந்த வதந்தி பயன்பட்டது.


இதே வதந்தி, சிற்சில மாறுபாடுகளுடன், 1989ல் போடி நாயக்கனூர் பகுதியில் ஜான் பாண்டியனை மையமாக வைத்துப் பரப்பப்பட்டு, கலவரத்தை விசிறி விட்டது.

****************



சமீப காலகட்டங்களில் தேர்தல் கமிஷன் பல கெடுபிடிகளைப் போட்டு, பிரச்சாரத்தை இரவு பத்து மணியுடன் நிறுத்திடச் சொல்லியதும், சில கட்சி வேட்பாளர்கள், பத்து மணிக்கு மேல் பேசுவதை நிறுத்தி விட்டு வெறுமனே கைகளைக் கூப்பி வணங்குவதுடன் சென்று விடுகின்றனர். இதெல்லாம் ஏதோ புதுமை என்று எண்ணி இருக்கையில், 1952 தேர்தலுக்கு முன்பிருந்தே தேவர் இவ்வாறுதான் செய்திருக்கிறார். ஆனால் தேவரைப் பேச விடாமல் தடுத்தது தேர்தல் கமிஷன் அல்ல. அரசாங்கம். இவர் வாய் திறந்து பேசினாலே சாதி மோதல்தான் உருவானது. எனவே அரசு இவருக்கு வாய்ப்பூட்டு போட்டது.
ஆனால் தேவர், 1957 முதுகுளத்தூர் கலவரத்தின்போதும், 'மவுனமாகக் கைகூப்பும் முறையை' கலவரத்தை தூண்டிவிட பயன்படுத்தினார். அறிக்கை ஏதின்றி வெறுமனே தேவரின் கைகூப்பிய முழுப்படம் ஒன்றை 'தினமணி' என்றெல்லாம் விளம்பரமாய்ப் பிரசுரித்ததோ, அன்றெல்லாம், கலவரம் உக்கிரம் பெற்றுள்ளது.


இங்கு எண்ணற்ற ஆதாரங்களை தேவரின் சாதி வெறிப்போக்கிற்கான சான்றாகக் காட்டினாலும் தேவர் அபிமானிகள், 'தேவர் தனக்கு சொந்தமாய் இருந்த எக்கச்சக்கமான ஏக்கர் நிலங்களை தலித்களுக்கு எழுதிக் கொடுத்தவர்' என்று சொல்வது வழக்கமே. அவ்வாறு தேவர் நிலம் தந்தமைக்கு இருந்த உள்நோக்கத்தை அன்றைய அமைச்சர்கள் பக்தவச்சலமும், சி.சுப்பிரமணியமும் சட்டசபையில் போட்டு உடைத்துள்ளனர் 'தனக்கு விசுவாசமாய் வாலாட்டும் ஓர் அடியாள் படையை தேவர் இவ்வாறுதான் உருவாக்கினார்' என்று.

பூலித்தேவன்: அண்ணன் மு கருணாநிதி

கட்டபொம்மனின் தளபதிகளிலே ஒருவர் வெள்ளையத் தேவன்-அவருடைய ஆருயிர் நண்பன் சுந்தரலிங்கம். சுந்தரலிங்கம்,மள்ளர் என்ற தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். வெள்ளையத் தேவனும் வீரன் சுந்தரலிங்கமும் இணைந்து பல போராட்டங்களை வெள்ளைக்காரர்களை எதிர்த்து நடத்தி இருக்கின்றார்கள். கட்டபொம்மனைக் காப்பாற்றுவதற்காக, வெள்ளையத் தேவனைக் காப்பாற்றுவதற்காக தன்னைத் தானே மாய்த்துக் கொள்கின்ற தற்கொலைப் படை வீரனாக மாறி உயிர் நீத்தது வீரன் சுந்தரலிங்கம்.

கட்டபொம்மனுக்கு நான் கோட்டை கட்டியவன் மாத்திரமல்ல. அந்தச் சுந்தரலிங்கத்திற்கும் சுந்தரலிங்கம் நகர் என்ற ஒரு நகரை நிர்மாணித்து அண்மையிலே திறந்து வைத்தவன்தான் நான். ஏன் சொல்கிறேன் என்றால், அந்தப் போராட்டத்திலே வெள்ளையத் தேவன், சுந்தரலிங்கம்மள்ளர் என்ற தேவேந்திர குல வேளாளர் ஆகிய இருவரும் ஒன்றாக இணைந்து நின்று உரிமைப் போராட்டத்தை நடத்த முடிந்தது.

அதைப்போலத்தான் பூலித்தேவனுக்கு உதவியாக முன்னணியில் இருந்தவர்கள் பகடை ஒண்டி வீரன், வெண்ணிக்காலாடி- இவர்கள் இருவரும்மள்ளர் என்ற தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அதுமாத்திரமல்ல, இவர்களுடன்தேவேந்திரகுல சமுதாயத்தைச் சேர்ந்த தளபதிகள் 350 பேர் பூலித் தேவனுக்கு உதவியாக இருந்தார்கள் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.கருணாநிதி

மீண்டும் பரபரப்பு அரசியலுக்குள் ஐக்கியமாகி இருக்கிறார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி



மீண்டும் பரபரப்பு அரசியலுக்குள் ஐக்கியமாகி இருக்கிறார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. அவரை சந்தித்தோம்..

''சில ஆண்டுகள் சத்தமே இல்லையே..?''

''நான் எம்.எல்.ஏ-வாக இருந்ததைக் காட்டிலும் இல்லாதபோது குறிப்பிடத்தக்க சாதனைகளைச் சத்தம் இல்லாமல் செய்திருக்கிறேன். தமிழகத்தில் 65 அரசு கலைக் கல்லூரிகளில் தலித் மக்களுக்கான 18 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி, 1,000 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இதை நிரப்ப தொடர் போராட்டம் நடத்தினோம். விளைவாக, 99--ல் 100 இடங்களை உடனடியாக நிரப்பிய தி.மு.க. அரசு, மற்ற இடங்களைப் படிப்படியாக நிரப்புவதாகக் கூறியது. எங்கள் கட்சியின் சார்பில் வழக்கு தொடுத்து, தலித்களுக்கான 632 பேராசிரியர் பணியிடங்கள் பெறப்பட்டன.



மீண்டும் எம்.எல்.ஏ. ஆகாததால் மட்டுமே நான் இடையில் ஒதுங்கி என் மருத்துவப் பணியில் மூழ்கிவிடவில்லை. மருத்துவமும் ஒரு சேவைதான். தெற்கு, மேற்கு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மருத்துவ முகாம்களை நடத்தினேன். குறிப்பாக, சிக்குன்குன்யா பாதிப்பு கடுமையாக இருந்த ஓர் ஆண்டு காலத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு என் மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை அளித்தேன்!''

''அ.தி.மு.க. அணியில் திடீரென ஐக்கியமானது ஏன்?''

''திடீரென்று ஐக்கியமானதாகச் சொல்ல முடியாது! 2006-ம் ஆண்டிலேயே, சமூக நல்லி ணக்கம் கருதி, தென் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக நேசக் கரம் நீட்டும் கட்சியுடன் கூட்டணி எனத் தீர்மானம் போட்டோம். உள்ளடக்கத்தில் அ.தி.மு.க-வைக் குறிப்பிடும் இந்தக் கருத்து, அந்தக் கட்சியின் தலைமையை அப்போது சென்றடையவில்லை. இப்போது கூட்டணி சேர்ந்திருக்கிறோம்.

இங்கு நடந்த எல்லா இடைத்தேர்தல்களிலும், ஆளும் கட்சியின் மிக மோசமான பணநாயகம் வலுத்து வருகிறது. இதை இப்படியேவிட்டால், மக்கள் பிரதிநிதியாக சாதாரண மக்கள் வரவே முடியாது. இதை, அ.தி.மு.க. அணியால் மட்டுமே தடுக்க முடியும். மேலும், தி.மு.க. ஆட்சியில் தலித் மக்களுக்கு எதிரான பல காரியங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தலித் மக்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரி முதல் ஆரம்ப நிலை அரசுப் பணியாளர் வரை பாதிக்கப்படுகின்றனர். தி.மு.க. அரசோ இதற்காக மனம் வருந்துவதாகத் தெரியவில்லை. மாறாக, ஏற்கெனவே பாதிக்கப்பட்ட தலித் மக்களை மேலும் அவமானப்படுத்திக் குற்றவாளி கூண்டில் நிறுத்துகிறது!''

''அ.தி.மு.க. ஆட்சியின் போதுதானே கொடியங் குளத்தில் தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெற்றன. அதை மறந்துவிட்டீர்களா?''

''95-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் அந்தக் கொடிய சம்பவம் தவறுதலாக நடை பெற்றுவிட்டது என்பதை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டுசென்றவுடன், உணர்வாலும் உடைமைகளாலும் பாதிப்புக்கு உள்ளான தேவேந்திர குல வேளாள மக்களின் காயத்துக்கு மருந்து போடக்கூடிய வகையில் பல திட்டங்களை அவர் அறிவித்தார். தென் தமிழகத்தில், பள்ளர்,- உடும்பர்,- காலாடி எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்ட மக்களை, சட்டமன்றத்தில் தேவேந்திரகுல வேளாளர் என அடையாளப்படுத்திப் பெருமை சேர்த்தார். கொடியங்குளம் சுற்றுவட்டாரத்தில் பாதிக்கப்பட்ட தேவேந்திர குல மக்கள் வசிக்கும் 13 கிராமங்களுக்குப் பயன்படக் கூடிய தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு ரூ.67லட்சம் ஒதுக்கினார். எட்டு தென் மாவட்டங்களில் மாவட்டக் கூட்டுறவு வங்கிகளின் இயக்குநர் பதவியில் தலித் மக்களை அமரவைத்தார். கட்டபொம்மனின் தளபதியும் சுதந்திரப் போராட்டத்தின் முதல் தற்கொலைப் போராளியுமான வீரன் சுந்தரலிங்கத்தின் பெயரால் தனி போக்குவரத்துக் கழகம் தொடங்கினார். ராமநாத புரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியச் செயலாளராக இருந்த நிறைகுளத்தானை எம்.பி. ஆக்கினார். அசாதாரணமாக நடந்து விட்ட ஒரு தவறை ஈடுகட்டுவதற்காக, நிறையக் காரியங்களை ஜெயலலிதா செய்துள்ளார்.

ஒப்பிட்டுப் பார்த்தால், அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு சம்பவம்தான் இப்படி நடந்தது. ஆனால், இன்றைய தி.மு.க. ஆட்சியில் ஆயிரம் சம்பவங்களைச் சொல்ல முடியும்.

மாஞ்சோலைத் தேயிலைத் தொழிலாளர் போராட்டத்தின்போது நடந்த தடியடியில் 17 பேரின் உயிர் பறிக்கப்பட்டது தி.மு.க. ஆட்சியில்தான்! 99--ல் புதிய தமிழகம் கட்சியினர் வாழும் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வஜ்ரா வாகனங்கள், அதிரடிப் படையைக்கொண்டு தாக்கி சித்ரவதை செய்தனர். அப்போது போலீஸார் நடத்திய கொடுமை, உலகத்தில் எங்குமே நடந்திருக்க முடியாது. ராஜபாளையம் தேசிகாபுரம் முதுகுடி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்களைக் கைதுசெய்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை கிளைச் சிறைக்கு லாரியில் கொண்டுசென்றார்கள். அப்போது, ஒவ்வொரு பெண்ணின் தலைமுடியையும் பக்கவாட்டில் தனித்தனியாக இரண்டு பெண்களுடன் சேர்த்துக் கட்டியபடி கொண்டுபோனார்கள். இதுபோல, தி.மு.க. ஆட்சியில் தேவேந்திர குல மக்களுக்கு நடந்த பாதிப்புகளை நிறையச் சொல்ல முடியும்.''

''தி.மு.க-வை விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் உறுதியாக ஆதரிக்கின்றனவே?''

''சென்னையில் குடியிருந்த இரண்டரை லட்சம் தலித் மக்கள் தங்களது வாழும் இடங்களை இழந்து அப்புறப்படுத்தப்பட்டு இருப்பது தி.மு.க. ஆட்சியில்தான்... சென்னையில் எங்களுக்கு உள்ள பலத்தை வைத்து நாங்கள் குரல் கொடுத்தும், அவர்கள் துரத்தி அடிக்கப்பட்டார்கள். சென்னை வட்டாரத்தில் தீவிரமாக அரசியல் செய்யும் தலித் அரசியல் சக்திகளோ, இதற்காக வீதியில் வந்து போராடவில்லை. அதற்கு அவர்கள் தயாராகவும் இல்லை. சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் இடம் பெற்றபோதிலும் தலித் மக்களுக்கு ஏற்பட்ட இந்த அவலத்தைப்பற்றி குரல் கொடுக்கவில்லை. காரணம், ஆட்சியாளர்களுடன் அவர்கள் சில காரணங்களுக்காக சமரசமாகப் போய்விட்டார்கள், இதைக் காலம் ஒரு ஆறாத காயமாகப் பதிவு செய்து இருக்கிறது!''

சனி, 25 செப்டம்பர், 2010

எழுதப்படாத சரித்திரம்-மாவீரர் சுந்தரலிங்கத் தேவந்திரர்!

தமிழர் வரலாறு பற்பல ரூபங்கள் காட்டும் மாயக்கண்ணாடியாக இருக்கிறது. ஓர் உண்மையின் மேல் விழுந்து பல பொய்கள் மறைகின்றன. ஆதாரங்கள், தகவல்கள் கிடைக்காமை காரணமாக வரலாறு புலப்படவில்லை என்றால் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. கிடைத்திருக்கிற வரலாறுகூட சாதிக்கழிப்புகள், சாதி மேலாண்மை காரணமாக அழிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் போகும் நிலைமை இன்றும் நீடிக்கிற அவலமாகத் தொடர்கிறது. ஆங்கிலேயக் கும்பனி ஆட்சியைந் எதிர்த்த தொடக்க காலப் போராட்ட வரலாற்றில் மேலெழுந்து வருகிற சில தலைவர்கள் புலித் தேவர், கட்டபொம்மன், மருது சகோதரர்கள் போன்றவர்களுடன் அவர்க-ளுக்கு நிகராகத் தகத்தகாயத் தியாகங்கள் செய்து தம் உயிரையும் ஈந்து, போதிய வெளிச்சமற்றுப்போன மாபெரும் தியாக வீரர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

அவர்களில் முதலில் வருகிறவர் சுந்தரலிங்கத் தேவேந்திரர். பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர் கட்டபொம்மு நாயக்கரின் தளபதியாக வாழ்ந்தவர் அவர். பாஞ்சாலங்குறிச்சிப் பாளையமும் கட்டபொம்முவும் கும்பனி ராணுவத்தால் அழித்தொழிக்கப்படுவதற்கு முன்னால், அவர்களைக் காத்து அம் முயற்சியில் தம் உயிரைத் தந்தவர் சுந்தரலிங்கம். ஆதிக்க ஆங்கிலேயரை எதிர்த்து முதல் சுதந்திரப் போராட்ட முயற்சிகள், எழுச்சிகளாகவும், புரட்சியாகவும் முளைத்தது தமிழகத்தில்தான் என்பேதே உண்மையான வரலாறு.

‘சிப்பாய் புரட்சி’ என்று சொல்லப்பட்ட, இந்தியாவின் வட மாநிலங்களில் நிகழ்ந்த 1857 போரே , இந்தியாவின் முதல் சுதந்திரப்போர் என்று வரலாறு தெரியாதவர்கள் (சாவர்க்கர் எழுதியதையும் சேர்த்தே சொல்கிறேன்) எழுதிய தவறுகளுக்கு மாறாக, பிரிட்டிஷ் கும்பனியை எதிர்த்த ஆதிப் போராட்டங்கள், போர்கள் தமிழ் மண்ணிலேயே நடந்துள்ளன. இந்தியாவின் ஆதிச் சுதந்திரப் போராளிகளில் ஒருவரே சுந்தரலிங்கத் தேவேந்திரர். பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள சுவர்னகிரியில் பிறந்தவர் சுந்தரலிங்கம். தந்தை கட்டக் கருப்பணத் தேவேந்திரர். தாயார் முத்தம்மாள். சுந்தரலிங்கம் பிறந்த ஆண்டு ஏறக்குறைய 1771 என்று நம்பப்படுகிறது. மனைவி சண்முகவடிவு. தம்பதிகளுக்கு இரு மகன்கள் உண்டு. ஒரு ‘நதி நீர்ப் பங்கீட்டில்’தான் சுந்தரலிங்கத்தின் அரசியல் வரலாறு தொடங்கி இருக்கிறது. பாஞ்சாலங்குறிச்சிக்குச் சொந்தமான ஆற்றிலோடைக் கண்மாய் நீரை எட்டயபுரத்தைச் சேர்ந்த தருவைக்குளம் கண்மாய்க்குத் திருப்ப எட்டயபுரத்து அதிகாரம் ஆற்றிலோடைக் கண்மாயின் குறுக்கே கரை எழுப்பியபோது, அதைத் தடுத்து எட்டயபுரத்தார்களை விரட்டியடித்த வீரச் செயலால் புகழடைந்தார் சுந்தரலிங்கம். பாஞ்சாலங்குறிச்சிக்கு அவர் செய்த முதல் தொண்டு அது. இதைத் தொடர்ந்து, சுந்தரலிங்கம், கட்டபொம்முவின் படைப்பிரிவில் முக்கியப் பொறுப்பில் சேர்க்கப்பட்டுத் தன் அர்ப்பணிப்பு மிக்க வீரச் செயல்களால் தளபதி என்கிற அளவுக்கு உயர்ந்திருக்கிறார்.

மதுரையை மையமாகக் கொண்டு விசாலமான தமிழ்நாடு-திருவிதாங்கூர் உள்ளிட்ட பூமியை ஆண்ட விசுவநாத நாயக்கன் (1529-1564) நிர்வாக வசதிக்காக, தமிழ்நாட்டு நிலப்பரப்பை 72 பாளையங்களாகப் பிரித்தார். அதில் ஒன்று பாஞ்சாலங்குறிச்சி பாளையம். இப்பாளையம் கட்டபொம்முவின், ஆந்திராவில் இருந்து வந்த தெலுங்கு தோக்குலவார் பிரிவு, முன்னோர்களுக்குத் தரப்பட்டது. அந்த வழியில் வீரபாண்டிய கட்டபொம்மன் வருகிறார். இவர் காலத்தில் நிலவரி, வசூலிக்கும் பொறுப்பு ஆங்கிலக் கும்பனிக்கு வந்து சேர்ந்தது. பெரும்பாலான பாளையங்கள் ஒழுங்காகக் கப்பம் கட்டித் தம் விசுவாசத்தைக் கும்பனிக்குக் காட்டிய காலத்தில், கட்டபொம்மு கப்பப் பணம் தர மறுத்தார். மறுத்தமைக்கான காரணங்கள், ஆங்கிலேயரின் அணுகுமுறை. வரம்பு மீறிய அதிகாரக் கொடுங்கோல் முறையில் சுதேச மன்னர்கள் என்று மக்களால் கருதப்பட்ட பாளையக்காரர்கள் மேல் ஆங்கிலேயர் செலுத்திய அவமரியாதைப் போக்குகள். இரண்டாவது காரணம், ஆதிக்கச் சக்திகளை எதிர்த்து அரும்பிக் கொண்டிருந்த சுதந்திர உணர்வு.

கும்பனிக்கு 1972 முதலே ஆறு ஆண்டுகளாகக் கட்டபொம்மு வரிகட்ட மறுத்துக் கொண்டிருந்தார். இந்தச் சூழலில் திருநெல்வேலி, இராமநாதபுரத்தின் ஆட்சியராக 1797-ல் நியமிக்கப்பட்ட ஜாக்சன், 26.10.1797 அன்று,‘உடனடியாக வரி செலுத்த வேண்டும் என்றும், தூத்துக்குடியில் முகாம் இட்டிருந்த இராணுவ அதிகாரி டேவிட்சனுக்கு உணவுக்காக ஆடுகள் அனுப்ப வேண்டும்’ என்றும் கட்டபொம்மனுக்குத் தாக்கீது பிறப்பித்தான். கட்டபொம்மன், இதைப் புறக்கணித்தான். அடுத்து ஜாக்சன் எழுதிய, ‘பாளையம் பறிமுதல் செய்யப்படும்’ என்று எச்சரிக்கை விடுத்த இரண்டு கடிதத்தையும் கட்டபொம்மு கசக்கித் தூர எறிந்தான். இந்தக் காலத்தில், கும்பனிக்கு எதிராக இதர பாளையக்காரர் மனதில் சுதந்திர வேட்கை உருவாகிக் கொண்டிருந்தது. இறுதியில் கட்டபொம்மு ஜாக்சனைச் சந்திக்கப் புறப்படுகிறார். உடன் சுந்தரலிங்கமும், ஊமைத்துரையும் பாதுகாப்புக்குச் செல்கிறார்கள். பேட்டிக்கு வரச் சொன்ன ஜாக்சன், சுமார் 23 நாட்கள் 400 மைல்கள் அவர்களை அலையவிட்டு அவமானப்படுத்திக் கடைசியில் 10.9.1798 - அன்று மாலையில் சந்திக்கிறான். கட்டபொம்மனை நிற்க வைத்தே பல மணிநேரம் பேசி, அவரை மேலும் அவமானப்படுத்துகிறான். டர்ரென்று நாற்காலியை ஸ்டைலாக இழுத்துப் போட்டு சிவாஜி கணேசன் உட்காருவார். சிவாஜிதான் அமர்ந்தார். நிஜக் கட்டபொம்மு நின்றுகொண்டிருந்தார். தன்னைக் கைது செய்யும் சூழல் உருவாவதை கட்டபொம்மு உணர்கிறார். தண்ணீர் குடித்துவிட்டு வருவதாகக் கீழே வருகிறார். ஆங்கிலச் சிப்பாய்கள் அவரை மடியைப் பிடித்து இழுக்கிறார்கள். சில சிப்பாய்கள் கட்டபொம்மனையும், ஊமைத் துரையையும் நோக்கிச் சுடுகிறார்கள். கோட்டைக்கு வெளியே நின்றிருந்த சுந்தரலிங்கம், தன் வீரர்களுடன் கட்டபொம்மனைப் பாதுகாக்க வருகிறார். அப்போது ராணுவத் துணைத் தளபதி கிளார்க், கட்டபொம்மனைக் கொல்ல பாய்ந்து வருவதைக் கண்ட சுந்தரலிங்கம், தன் வாளால் அவனை வெட்டிச் சாய்த்தார்.

கட்டபொம்மு அப்போது தப்பித்தது, சுந்தரலிங்கத் தேவேந்திரரால்தான். ஓரளவு அமைதி திரும்பும் சூழ்நிலையில், எட்டையபுர நாயக்கர் கட்டபொம்மு மீது, கும்பனிக்குப் புகார்க் கடிதம் அனுப்புகிறார். கட்டபொம்முவுக்கும், எட்டப்ப நாயக்கருக்கும் முன்னரே இருந்த எல்லைத் தகராறும், எட்டப்பரின் கும்பனி விசுவாசமும் இப்படிப்பட்ட பல புகார்களைக் கொடுக்க வைத்தன. அதே காலத்தில் ஊத்துமலை பாளையக்காரர், சிவகிரிப் பாளையக்காரர் முதலான பலரும், கட்டபொம்மனின் மேல் கும்பனிக்குப் புகார் அனுப்பிக் கொண்டே இருந்தார்கள். மற்றொரு பாளையத்தில் பிரவேசிப்பது, அழிம்பு செய்வது, பயிர்களை நாசமாக்குவது அல்லது களவாடுவது, மாடு பிடிப்பது போன்ற சின்னச் சின்ன வரம்பு மீறுதலை எல்லோருமே எல்லா பாளையக்காரர்களுமே செய்தவர்கள்தான். கட்டபொம்முவும் செய்தார். எரிச்சலடைந்த கும்பனி ஆட்சி, பாஞ்சாலங்குறிச்சியின் மேல் படையெடுத்தது.

இந்த இடத்தில் நாம் ஒன்றை நினைவுப்படுத்திக் கொள்வது நல்லது. பாஞ்சாலங்குறிச்சி வரலாற்றை எழுதியவர்களில், சுந்தரலிங்கத் தேவேந்திரரின் பங்களிப்பைத் தனியாகப் பிரித்து எழுதி, அவருக்குரிய மரியாதையை ஏற்படுத்திய வரலாற்று ஆசிரியர் தமிழவேள் அவர்களைப் பாராட்ட வேண்டும். ‘பாஞ்சாலங்குறிச்சி படைத் தளபதி சுந்தரலிங்கத் தேவேந்திரர்’ என்னும் பெயர் கொண்ட அவரது ஆய்வு நூல், மிகுந்த முக்கியத்துவம் உடையது. இந்த நூல் மூலம் பல மறைக்கப்பட்ட செய்திகள் வெளியாகி உள்ளன. அவைகளில் முக்கியமான ஒன்று, பாஞ்சாலங்குறிச்சிப் போரில், கட்டபொம்மனின் தோளுடன் தோளாக நின்று, கடைசிவரை அவருடன் சேர்ந்து போராடித் தம் உயிரைத் தந்தவர்கள் தேவேந்திரர்களும் பகடைகளுமே ஆவர். காலாடிகளையும், பகடைகளையும் தம் பிள்ளைகள் போலக் கருதிக் கட்டபொம்மு வளர்த்தான் என்கிற முக்கியச் செய்தியைத் தமிழவேள் பல ஆதாரங்கள் மூலம் தந்துள்ளனர். இந்தக் கட்டுரையில் பல முடிவுகளை அந் நூலில் இருந்தே நான் எடுத்துக் கொண்டேன்.

5.9.1799 -ம் தேதி பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை முற்றுகை இடப்பட்டு அன்றே தாக்கப்பட்டது. சுந்தரலிங்கத் தேவேந்திரர் தலைமையில் காலாடிக் கருப்பத் தேவேந்திரர், வீரமல்லு நாயக்கர், கந்தன் பகடை, பொட்டிப் பகடை முதலான துணைத் தளபதிகளின் வழிகாட்டுதலில் பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் கும்பனிப்படை வீரர்களுடன் மோதினார்கள். மிகவும் உக்கிரமாக நடைபெற்ற முதல் நாள் போரில் ஐந்து முக்கிய ஆங்கிலத் தளபதிகள் கொல்லப்பட்டார்கள். ஆங்கிலப் பகுதிக்குப் பெரும் சேதம் விளைந்தது.

மறுநாள் 6-ம் தேதி இரவு கட்டபொம்மன், தன் தம்பி ஊமைத்துரையோடு கோட்டையைவிட்டு வெளியேறி, படை திரட்டும் பொருட்டுக் கோலார்பட்டிக்குச் செல்கிறார். மறுநாள் கோட்டை இடித்துத் தள்ளப்படுகிறது. அரண்மனைக்குள் ஆங்கிலேயர்கள் கொள்ளையடிக்கிறார்கள்.

மன்னர்கள் காலத்திலே இருந்து பாளையக்காரர்கள் வரை, ஆங்கிலேயர்கள் மற்றும் ஆதிக்கச் சக்திகளிடம் தோற்றமைக்குக் காரணம், தமிழ்நாட்டு வீரர்கள் அவர்கள் தமிழர்களோ, கம்பளத்தார்களோ யாராக இருந்தாலும் ஒழுங்கான படைப் பயிற்சியும் போதுமான ஆயுதங்கள் இல்லாமையும், ஆயுதங்கள் நவீனமானதாய் இல்லாமையும், எல்லாவற்றுக்கும் மேலே துரோகத்தாலும் வீழ்ந்தார்கள். ஆயிரக்கணக்கான தேவேந்திரர்கள், அதே அளவு அருந்ததியர்களின் வீரத்தில் பழுதில்லை. தாய் பூமிப் பற்று மற்றும் விசுவாசம் அல்லாமல் வேறு எதுவும் அவர்களிடம் இல்லை.

கோலார்பட்டியில் இருந்து கொண்டு படைதிரட்டிக் கொண்டிருந்த கட்ட பொம்மனையும் ஊமைத் துரையையும் எட்டயபுரம் படையும், ஆங்கிலேயர் படையும் சுற்றிக்கொண்டது. கட்டபொம்மனும் ஊமைத்துரையும் தப்பித்து வெளியேறினர். தாளாபதிப்பிள்ளை கைது செய்யப்படுகிறார். சுந்தரலிங்கம் தலைமறைவாகிறார்.

கட்டபொம்மனைக் கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. தமிழவேள் மிகுந்த ஆவண ஆதாரங்களுடன் இக்குறிப்புகளை எழுதுகிறார். ஒற்றர்கள் மூலம் கட்டபொம்முவும், ஊமைத்துரையும் புதுக்கோட்டையில் சந்திப்பதாகத் தகவல் அறிந்த பாளர்மேன், புதுக்கோட்டை தொண்டைமானுக்குத் தகவல் அனுப்பி, கட்டபொம்மன் குழுவினரைக் கைதுசெய்ய உதவும்படிக் கேட்டுக்கொள்கிறான். சிவகங்கை வட்டத்தைச் சேர்ந்த திருக்களம்பூர் அருகில் கலியபுரம் எனும் இடத்தில் 23.9.1799 அன்று தொண்டைமான் ஆட்கள் கட்டபொம்மன், ஊமைத்துரை, மைத்துனர்கள் இருவர் மற்றும் மூன்று பேருடன், ஆக ஏழுபேரைக் கைது செய்கிறார்கள். 5.10.1799 அன்று அவர்கள் கயத்தாறு கொண்டுவரப்பட்டு 16.10.1799 வரை சிறையில் வைக்கப்படுகிறார்கள். 16.10.1799 அன்று காலை கட்டபொம்மு மீது விசாரணை நடத்தப்படுகிறது. தீர்ப்பை எழுதிவைத்துக்கொண்டு, விசாரணையைத் தொடங்குகிறார் பாளர்மேன். ஐந்து குற்றச்சாட்டுகளை அடுக்குகிறான். ‘ஏதேனும் கூற விரும்புகிறாயா?’ என்று கட்டபொம்மனிடம் கேட்கிறான் அவன். பாளர்மேனை அலட்சியப்படுத்துகிறார் கட்டபொம்மன். வேடிக்கை பார்க்க வந்த கும்பனி விசுவாசிகளான எட்டயபுரம், சிவகிரிப் பாளையக்காரர்களை மிக ஏளனத்துடன் பார்க்கிறார். தூக்குமேடைக்கு மிகுந்த வீரத்துடன் நடந்து செல்கிறார் கட்டபொம்மன். கயத்தாறு பழைய கோட்டைக்கு எதிரே உள்ள புளிய மரத்தில், கட்டபொம்மன் தன் உயிரைச் சுதந்திரத்துக்கு விலையாகக் கொடுத்தார்.

பாஞ்சாலங்குறிச்சி போரின் அடுத்தகட்டம், ஊமைத்துரையோடு ஆரம்பமாகிறது. உண்மையில் இந்தக் காலகட்டத்தில் கதாநாயகன் சுந்தரலிங்கத் தேவேந்திரன்தான். பாளையங்கோட்டைச் சிறையில் அகப்பட்டு, தூக்குக்குக் காத்திருந்த ஊமைத்துரையையும் மற்றும் உள்ள பாஞ்சை வீரர்களையும் மிகப் பெரிய சாகசம் செய்து தப்பிக்கச் செய்தவர் சுந்தரலிங்கத் தேவேந்திரர். அந்த வீரம் செறிந்த வரலாற்றை அடுத்துக் காண்போம்.

பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டது 1799-ம் ஆண்டு. அவருக்குப் பிறகு பாளையக்காரராகத் தம்மை அறிவித்துக்கொண்ட, அவரது தம்பி ஊமைத்துரை கொல்லப்பட்டது 1801-ம் ஆண்டு. இடையில் கழிந்த இரண்டு ஆண்டுகள் மேலும் முப்பது நாட்கள், கும்பனிக்கு எதிராக, ஒரு சுதந்திரப் போராட்டத்தை நடத்தினார் ஊமைத்துரை என்கிற குமாரசுவாமி. ஊமைத்துரையோடு அவருக்கு நிகராக, சில வேளைகளில் மேலாகப் போர்ச் செயல்பாடுகளில் ஈடுபட்டவர், பாஞ்சாலங்குறிச்சியின் தளபதியாக இருந்த கட்ட கருப்பச் சுந்தரலிங்கத்தேவேந்திரர் என்றே வரலாறு பதிவு செய்திருக்கின்றது. இப்போதும் வெள்ளையருக்கு எதிராகப் படைகளும், நாயக்கர்களும் தேவேந்திரர்களும் கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள், ஊமைத்துரைக்கு ஆதரவாக.

கயத்தாறில் கட்டபொம்மன் தூக்கிலிடப்-பட்டபோது (16.10.1799) ஊமைத்துரையும் அவருக்கு நெருக்கமான உறவும், சில வீரர்களும் ஆகப் 16 பேரும் பாளையங்கோட்டைச் சிறையில், தூக்குக் கயிறை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் கைவிலங்கும், கால் விலங்கும் போடப்பட்டு மிக விழிப்பாகக் கண்காணிக்கப்பட்டனர்.

முன்னர், 9.9.1799 அன்று கோல்வார்பட்டியில் நடந்த சண்டையின்போது தலைமறைவான சுந்தரலிங்கம், சும்மா இருக்கவில்லை. தலைமறைவுக் காலமான அந்த ஐந்து மாதங்களைப் பயன்படுத்திக்கொண்டு, பாஞ்சாலங்குறிச்சியின் பக்கத்தில் அவர் பிறந்த ஊரான சுவர்னகிரி, பசுவந்தனை, பட்டணமருதூர் முதலான ஊர்களில் தேசப்பற்றும் (தேசம் என்பது அந்தக்காலத்தில் பாஞ்சாலங்குறிச்சிதான்), போர் ஆர்வமும் கொண்ட இளைஞர்களைத் திரட்டி படையாக்கிப் போர்ப் பயிற்சி கொடுத்தார். இப்படியாகச் சிறுபடையைத் தயார்செய்து கொண்டிருந்த சுந்தரலிங்கம், பாளையங்கோட்டை சிறையை உடைத்து ஊமைத்துரை மற்றும் குழுவினரையும் மீட்கத் திட்டமிடத் தொடங்கினார். சிறையிலிருக்கும்

ஊமைத்துரைக்கும் சுந்தரலிங்கம் முதலான புரட்சிக்காரருக்கும் பாலமாக இருந்து பெரும்பணி செய்தவர். பொட்டிப் பகடை. ஊமைத்துரைக்கு உணவு கொண்டு போய் கொடுக்கும் பணியில் இருந்த பொட்டிப் பகடை, ஊமையன் குழுவினர் சொல்வதைப் புரட்சிக்காரர்க்கும், இவர்கள் திட்டத்தை ஊமையனுக்கும் சொல்லி வந்து, சிறை உடைப்புக்கு உருவம் கொடுத்தார். வெளியில் இருந்த புலிக்குட்டி நாயக்கரும் உதவி செய்ய முன்வந்தார். (ஊமையன் என்ற சொல், அன்போடு பயில்கிறது, வரலாற்றில்)

சிறை உடைப்பு 1801-ஜனவரி இரண்டாம் தேதி என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு முன்நாள் சுமார் 200 புரட்சியாளர்கள், நெல்லை-பாளையங்கோட்டை சாலையில் காணப்பட்டார்கள். அவர்கள் திருச்செந்தூர், முருகனுக்குக் காவடி எடுப்பதுபோல, காவடிகளைத் தம் தோளில் வைத்துக்கொண்டு சிந்துப் பாடல்கள் பாடியபடி வந்தார்கள். இடுப்பில் மஞ்சள் துண்டு கட்டிக்கொண்டு, மந்திரங்கள் ஓதியபடி பக்தர்களுக்குத் திருநீறு அளித்துக்கொண்டு நடந்தார்கள். முன்னரே அங்கிருந்த வீரர்களுடன் சங்கேதச் சொற்களில் உரையாடியபடியும் பாளை சிறைச்சாலைக்கு முன்பாக நடந்து இடத்தைக் கவனித்தார்கள். அதில் பெரிய காவடி எடுத்தவராகச் சுந்தரலிங்கம் இருந்தார்.

இதேநாள், சிறைச்சாலையில் இருந்த ஊமையன் குழுவினர், ஒரு நாடகம் நடத்தத் தொடங்கினார்கள். சிறையில் பெரியம்மை வந்த ஒரு கைதி இறந்ததை முன்னிட்டு, ஊமையன் குழுவினரின் கை விலங்குகள் விலக்கப்பட்டிருந்தது, அவர்களுக்கு நல்ல வாய்ப்பைத் தந்தது. அதோடு, போரில் இறந்த உற்றார் உறவினர்களுக்குத் திதி கொடுக்க விரும்புவதாகவும், அதற்கான வாழை இலை, தேங்காய், சூடம் பொங்கலுக்கான அரிசி, வெல்லம், விறகு போன்றவை வாங்க அனுமதி வேண்டும் என்று சிறையதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். விஷயம் தெய்வ நம்பிக்கை சார்ந்ததாக இருப்பதால், தனக்குத் தெய்வக் குற்றம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் அதிகாரி அனுமதி கொடுத்தார்.

அதே நேரம் காவடி எடுத்துக்கொண்டு வந்த சுந்தரலிங்கம் குழுவினர், விறகுகள், வாழை, பழங்கள், அரிசி, பருப்பு விற்கும் வியாபாரிகளாக உருமாறினார்கள். திருச்-செந்தூருக்குக் காவடி எடுத்து வரும் பக்தர்கள், ஆங்காங்கே தங்கிப் பொங்கிச் சாப்பிடுவது யாதார்த்தம் ஆனதாலும், இம்மாதிரி வியாபாரிகள் அங்கு திரிவது இயல்பானது என்பதாலும், சிறை அதிகாரி, ‘இந்த’ வியாபாரிகளை விகற்பமாக நினைக்கவில்லை. அதோடு, சிறை அதிகாரி, அந்த வியாபாரிகளைச் சிறைக்குள் அனுமதித்தார். சிறைக்குள் புகுந்த வியாபாரிகள் ஊமையனின் சைகையைப் பெற்றவுடன், அந்தச் சமயத்தில் சிறைக்குள் இருந்த இருட்டைப் பயன்படுத்திக்கொண்டு, விறகுச் சுமைக்குள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை வெளியே எடுத்தார்கள். சிறைக்குள் அடுத்து ஏற்பட்ட சண்டையில் சிறைக்கதவு உடைக்கப்பட்டு, ஊமையன் குழுவினர் வெளியேறினர்.

புரட்சியாளர்கள், ஜனவரி 2-ம் தேதியைத் தேர்ந்தெடுத்தமைக்கான காரணம், அன்று கும்பனி அதிகாரி மெக்காலே வீட்டில் மாலை நடந்த விருந்துக்கு, இருபது அதிகாரிகளும், அவர்களது பாதுகாப்புக்கு நிறைய சிப்பாய்களும் கலந்துகொண்டிருந்தார்கள். சிறை பாதுகாப்பு பலவீனப்பட்டிருந்தது.

ஊமையன் குழுவும், சுந்தரலிங்கம் வீரர்களும் நேராகப் பாஞ்சாலங்குறிச்சிக்கு (சுமார் 30 கல் தொலைவில் இருக்கிறது) வந்து சேர்ந்தார்கள். ஆங்கிலேயரால் இடித்துப் பாழ்பட்ட கோட்டையை மீண்டும் கட்ட வேண்டியதே முதல் பணியாக அவர்களுக்கு இருந்தது. ஆறு நாளில், கோட்டை உருவாயிற்று. சுமார் 500 அடி உயரமும் நீளமும், 200 அடி அகலமும் கொண்ட கோட்டை. கோட்டைச் சுவரின் உயரம் 12 அடிகள்.

ஊமையனின் சிறையுடைப்பு கும்பனிக்கு மாபெரும் பின்னடைவு என்பதை அவர்கள் உணரவே செய்தார்கள். கயத்தாற்றை நோக்கி கும்பனிப் படைகள் புறப்பட்டன. குலைய நல்லூரிலும் மற்றும் பல ஊர்களிலும் ஊமையனின் கெரில்லா முறைத் தாக்குதலில் பெரும் நஷ்டங்களைச் சந்தித்தது கும்பனி படை. இந்தக் கட்டத்திலும் ஊமைத் துரை, ஒரு கூட்டணிக்கு முயற்சி செய்தார். பாளையக்காரர்கள் பலருக்கும் தனக்கு உதவுமாறும், உதவவில்லை என்றாலும், கும்பனிக்கு உதவ வேண்டாம் என்றும் சுதந்திரத்தின் பெயரால் ஓலை அனுப்பினார். தஞ்சை, புதுக்கோட்டை, எட்டையபுரம், ஊத்துமலைப் பாளையங்கள் ஊமையன் கோரிக்கையை நிராகரித்தன. தொடக்கத்தில் ஊமையன் சில குறிப்பிடத்தகுந்த வெற்றிகளைப் பெற்றார். என்றாலும் கும்பனிப் படை பலம், பீரங்கிகள் போன்ற நவீன ஆயுதபலம், தமிழ் நிலத்தில் நிலைபெற்றிருக்கும் துரோக பலம் ஆகியவற்றின் உதவியால் கும்பனி, வெற்றியை ஈட்டத் தொடங்கியது.

பாஞ்சாலங்குறிச்சி கோட்டை 24.5.1801-ல் வீழ்ந்தது. ஊமைத் துரையும் சுந்தரலிங்கமும் தப்பித்து வெளியேறினார்கள். பகடைகளும், தேவேந்திரர்களும், நாயக்கர்களும் இரத்தத்தாலும், வியர்வையாலும் கட்டிய கோட்டை சிதைந்தது.

போரிட்டுக் கொண்டே சென்றதில் பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் கோட்டைக்கு வெளியே சிதறிக் கிடந்தனர். கோட்டையில் இருந்து மூன்று கல் தொலைவில் இருந்த சுவர்னகிரிக்கு அருகில் ஊமையனும், சுந்தரலிங்கம், வேறு பலரும் வெட்டுக் காயங்களுடன் மண்ணில் கிடந்தனர். வீழ்ந்துக்கிடந்த வீரர்களின் மத்தியில் சுந்தரலிங்கத்தைக் கண்டுபிடித்தார், சுந்தரலிங்கத்தின் தாயாரான முத்தம்மாள். சுந்தரலிங்கம், தன் தாயிடம் ‘என்னை விடு, பக்கத்திலே கிடக்கும் சாமியைக் (குமாரசாமியாகிய ஊமைத்துரை) காப்பாற்றும்மா’ என்று சொல்லி இருக்கிறார். முத்தம்மாள் இருவரையுமே, தன் வீட்டுக்கு எடுத்து வந்து, காயங்களுக்கு மருந்திட்டுக் காப்பாற்றி இருக்கிறார்.

உடல் நிலை தேறியதும், ஊமைத்துரையும் சுந்தரலிங்கமும், மருது சகோதரர்களின் உதவியைப் பெற சிறுவயலுக்குச் சென்றார்கள். ஊமையனுக்கு அடைக்கலம் கொடுத்தமைக்காக, கும்பனி சிவகங்கை மேல் படையெடுத்தது. மருது சகோதரர்கள் மற்றும் ஊமைத்துரை, சுந்தரலிங்கம் ஆகியோர் அணிதிரண்டு போரிட்டார்கள். நான்கு மாதங்கள் தொடர்ந்த இந்தப் போரின் இறுதி, மிக்க சோகத்தில் முடிந்தது. மருது சகோதரர்கள் தூக்குக் கயிற்றில் தங்கள் சுதேச மானத்தை எழுதினார்கள். விருப்பாட்சியில் ஊமையனும், சுந்தரலிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலங்குறிச்சி பீரங்கி மேட்டில் வைத்து, 16.11.1801 அன்று ஒரே நாளில் ஒரே இடத்தில் தூக்கிலிடப்பட்டார்கள்.

இப்படியாக ஆதிச் சுதந்திரப் போராட்டம், பாஞ்சாலங்குறிச்சியைப் பொறுத்தவரையில் ஒரு முடிவுக்கு வந்தது. மாபெரும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தமிழ் நிலத்துப் போர், தமிழர்கள் பெருமைப்படும் விதத்திலேயே நடந்து முடிந்தது.

வரலாற்றின் பக்கங்களை, வரலாறு நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, யாரும் அறிவதும் இல்லை. உணர்வதும் இல்லை. பல காலங்களுக்குப் பிறகு, வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் ஓர் ஆய்வாளர், வரலாற்று நிகழ்ச்சிகளை, வரலாற்றை உருவாக்கிய மாமனிதர்களின் பங்கை, தன் அறிவையும் தன் சார்பையும் கொண்டு அளவிடுகிறார். போராட்டமே வரலாற்றை உருவாக்குகிறது என்கிற ஞானம் கைவரப்பெற்ற ஆய்வாளர், தன் வரலாற்றைப் போராளிகளைச் சார்ந்து உருவாக்குகிறார். கான்கிரீட் தரையிலும் மீன் பிடிக்க ஆசைப்படும் ஆய்வாளர், நிறுவனங்கள் தமக்குச் சாதகமாக உருவாக்கி இருக்கும் கருத்துகளோடு உடன்பட்டுப் பொய்யை விரிக்கிறார்.

பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் பற்றிய கதைப் பாடல்கள், அவர்கள் அனைவரும் மறைந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகே, அதாவது 1850க்குப் பிறகே உருவாக்கப்படுகின்றன. 1847-ம் ஆண்டு, கும்பனி அரசு அடிமை முறையை ஒழித்த பிறகே, இந்தக் கலை இலக்கியங்கள் வெளிப்படத் தொடங்கின. நாட்டுப் புலவர்கள், தங்களுக்கு வந்து சேர்ந்த நிகழ்ச்சிகளின் புரிதல் அடிப்படையில் மட்டுமே அல்லாது, அவர்கள் காலத்து ஊரின் பாடப்படும் இடத்தின் சாதி மேலாண்மைக்கு இசையத் தம் பாடல்களைப் பாடி இருக்கிறார்கள்.

பாஞ்சாலங்குறிச்சி போர் இலக்கியத்தில் நிறைய புனைவுகள் புகுந்துள்ளன. இப்புனைவுகளில் இருந்து, உண்மையைத் தேடும் சில ஆய்வாளர்கள் அண்மைக் காலத்தில் உருவாகி இருக்கிறார்கள். மேற்சாதித் தலைவர்களோடு, சமகாலத்தில் சம அளவில் பங்குகொள்ளும் வீரர்கள், அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தால், வரலாற்றில் இருந்தே அழிக்கப்பட்ட இழி நிலையை மாற்றும் ஆய்வாளர்கள், கடந்த சில ஆண்டுகளில்தான் வந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் சுந்தரலிங்கத்தை வெளிக் கொணர்ந்த தமிழவேள்.

பாஞ்சாலங்குறிச்சிப் போரில் முக்கியமானவர்-களாக, கட்டபொம்மன், ஊமைத் துரை, சிவத்தையா, தானாபதிப்பிள்ளை, சுந்தரலிங்கம், தாலாடி கருப்பணர், கந்தன் பகடை, முத்தன் பகடை, பொட்டிப் பகடை ஆகியோரே முக்கியமானவர்கள் என்கிறார் தமிழவேள். தேவேந்திரன், பகடை, பறையர்கள் என்று எழுதவே ஆதிக்க சாதிப் பேனாக்கள் மறுக்கும் சூழ்நிலையே வரலாறு முழுதும் இருந்துள்ள காலகட்டத்தில் இவர்களின் தியாகம் மறைக்கப்பட்ட காரணத்தை விளங்கிக் கொள்ள முடிகிறது. பாஞ்சாலங்குறிச்சி வரலாற்றில் வெள்ளையத் தேவன், வெள்ளையம்மாள் இருவரும் புனைப் பாத்திரங்கள் என்கிறார் தமிழவேள்.

பாஞ்சாலங்குறிச்சிப் போரில் முதல் களப்பலியே துணைத் தளபதி கந்தன் பகடை. வரலாற்று ‘மேற்குல’ ஆசிரியர்களுக்கு அதை எழுதவே கை கூசுகிறது. ஆனால், மக்கள் தங்கள் வீரர்களை மறப்பதில்லை.

கட்டக் கருப்பன் சுந்தரலிங்கம்

மட்டிலா பேரும் கொடுத்தானடா

ஆயிரம் கம்பளம் நூறு பரிவாரமவதற்கு

நீயொரு வீரனடா-என்று வானமாமலை தொடுத்த கட்டபொம்மன் கதைப்பாடல் கூறுகிறது.

.......பிரபஞ்சன்

சுந்தரலிங்கம்

சுந்தரலிங்கம் (Sundaralinkam) தமிழகத்தின் கடைகோடியான திருநெல்வேலி மாவட்டத்தில் கவர்னகிரி என்னும் ஊரில் பிறந்த விடுதலை போராட்ட வீரர். இவர் வீரபாண்டிய கட்டபொம்மன் படையில் வீராக சேர்ந்து பின்னாளில் துணை தளபதியாகவும், தளபதியாகவும் மாறினார். கும்பினி (ஆங்கிலயேர்) எதிரகாக நடந்த போரில் வெள்ளையன், கந்தன் பகடை, முத்தன் பகடை , கட்டன கருப்பணன் போன்றோர்களுடன் பங்கு பெற்று தனது இன்னுயிரை வீரர்களோடு மாய்ந்தவர். தமிழக அரசு இவரின் பெருமையெய் போற்றி இவர் பிறந்த ஊரில் நினைவு சின்னமும், அழகு வளையமும் எடுத்துள்ளது. இவரின் நினைவை போற்றி முதுகுளத்தூரில் இவருக்கு ஒரு சிற்பம் (சிலை) வைக்கப்பட்டுள்ளது.

வரலாறு
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் வருவது போன்ற வரலாறு உண்மையில் இல்லை. கட்டபொம்மன் வரி கட்டுவதற்காக சாக்சன் (Jackson) னிடம் இராமநாதபுரத்தில் இருந்து குற்றாலம், சிவகிரி என பல இடங்களுக்கு அலைய வைக்கப்பட்டது பலருக்கு அறிந்து இருக்க வாய்ப்பில்லை. மேலும் கும்பினியர் கட்டபொம்மன், ஊமைத்துரை போன்றவர்களை கொன்றபின், அவ்விடத்தில் இருந்த ஆவணங்களை அழிந்து விட்டதாக நடுநிலையாளர்கள் கருதுகின்றனர். அப்போர் நடந்த பல ஆண்டுகளுக்கு கழிந்து, போரில் பங்கு பெற்றவர்களை பற்றி நாட்டுபுற பாடல்களும், கூத்துகளும் இயற்றப்பட்டன. இப்படியாக இயற்றப்பட்ட பாடல்களில், கூத்துகளில் தனது குமுகத்தை சேர்ந்தவரை பற்றி பெருமையாக இட்டுகட்டி கூறப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் விளம்புகின்றனர். வானமாமலை இப்பகுதியில் வழங்கப்பட்ட நாட்டு புற பாடல்களை தொகுத்துள்ளார். இதனின் ஊடாகவே இப்போரில் பங்கு பெற்ற சுந்தரலிங்கம், வெள்ளையன், கந்தன் பகடை, முத்தன் பகடை , கட்டன கருப்பணன் போன்றவர்களை அறிய முடிகிறது.

கட்டபொம்மன் மூன்று ஆண்டுகளாக வரி கட்டவில்லை என்றும், அவ்வரியெய் விரைவில் கட்டுமாறு, சாக்சன் மூன்று மடல்களை கட்டபொம்மனுக்கு அனுப்புகிறார். நான்காவது மடலில் நாங்கள் அனுப்பிய மடல்களுக்கு விடை அனுப்பாமலும், வரியெய் ஒழுங்காக செலுத்தாதற்கும் நாங்கள் போர்தொடுக்க முடிவு செய்யுள்ளதாக தெரிவிக்கிறார். இதனால் தனது வீரர்களோடு கட்டபொம்மன் இராமநாதபுரம் சென்று, சாக்சனை பார்க்க விரும்புவதாக தெரிவிக்கிறார். சாக்சனோ தான் குற்றாலம் செல்வதாக தகவல் தந்து , குற்றாலம் செல்கிறார். கட்டபொம்மனும் தனது பரிவாரங்களோடு குற்றாலம் சென்று சாக்சனை சந்திக்க விரும்புகிறார். சாக்சனோ சிவகிரியில் சந்திப்பதாக சொல்லி, அவ்விடத்திலும் சந்திக்காமல் செல்கிறார். இறுதியாக அலைகழிக்கப்பட்டு இராமநாதபுரத்தில் சாக்சன், கட்டபொம்மனை பார்த்து பேசுகிறார். சந்திப்பின் போது, கட்டபொம்மனை ஒரு மன்னன் என கருதாமல், நிற்க வைத்து பேசுகிறார். இதனால் சினம் அடைந்த கட்டபொம்மன் கோபமாக வெளியேறும்பொழுது, ஒரு வெள்ளையர் தடுக்கிறார். இதனை பார்த்த கட்டபொம்மனின் வீரர் ஒருவர் வெள்ளையரை வெட்டி சாய்ந்து அவ்விடத்தில் இருந்து கட்டபொம்மனை மீட்டு கோட்டைக்கு செல்கிறது.

கோட்டை சென்ற கட்டபொம்மன், அன்றைய சென்னையில் உள்ள செயலர்க்கு விரிவாக மேல நடந்த நிகழ்வை பற்றி மடல் எழுதுகிறார். பின்னாளில் உசாவல் குழு சாக்சனிடம் தவறு உள்ளதென்றும், ஆனால் இறந்த வெள்ளையரின் மனைவிக்கு கட்டபொம்மன் திங்கள்தோறும் (மாதம்) உதவி பணம் கொடுக்க வேண்டுமென்று கட்டளை இடுகிறது. கட்டபொம்மன் அதை அப்படியே ஏற்றுகொள்கிறார். சில மாதங்களில் சாக்சன் மாற்றப்பட்டு அவ்விடத்திற்கு ஆலன் யூம் வருகிறார்.

இவ்வேளையில் கட்டபொம்மனின் படை தளபதி தானாதிபதி தனது மகளின் திருமணத்திற்க்காக அருகில உள்ள பாளையங்களில் நெற் களஞ்சியங்களை கொள்ளை அடிக்கும் பொழுது, இரு காவலர்கள் கொல்லப்படுகின்றனர். இந் நிகழ்வுகாகவும், வரி செலுத்தாமைக்ககாகவும் கட்டபொம்மனின் மீது போர்தொடுப்பதாக கும்பினியர் அறிவிக்கிறார்கள். இப்போரின் போது கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டு, ஊமைத்துரை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்படுகிறார். பின்னாளில் ஊமைத்துரை கட்டபொம்மனின் வீரர்களால் விடுவிக்கப்பட்டு ஏழு நாளில் பழைய இடந்தில் மண்சுவரில் ஒரு கோட்டை எழுப்படுகிறது.

பின்னாளில் நடக்கும் சண்டையில் ஊமைத்துரையின் கோட்டை அழிக்கப்படுகிறது. அவர் அவ்விடத்தில் தப்பி மருதுபாண்டியர்களின் உதவியெய் நாடுவது வரலாறு. பின்னாளில் மருதுபாண்டியர்கள் தோற்கடிக்கப்படும் பொழுது, ஊமைத்துரை தப்பி பழனிக்கு அருகில் உள்ள விருப்பாச்சி மலையில் நடக்கும் சண்டையில் பிடிபட்டு, மற்றவரோடு தூக்கிலிடப்படுகிறார்.

சுந்தரலிங்கத்தின் பங்கு
வெள்ளையர்களின் ஆவணப்படி கட்டபொம்மன் , ஊமைத்துரை, தானாதிபதி இவர்களை பற்றித்தான் அறியப்படுகிறது. மற்றவர்களின் வீரம் செறிந்த போராட்டங்கள் நாட்டுபுற பாடல்கள் மூலம்தான் தெரியவருகிறது.

சுந்தரலிங்கம் தனது ஊரில் உள்ள கண்மாயெய் (குளம்) பக்கத்து பாளையங்காரர்கள் மறிந்து கட்டும்பொழுது ஏற்படும் சண்டையில், சுந்தரலிங்கம் மிக திறமையாக போரிடுவதால் அம்முயற்சி தடுக்கப்படுகிறது. இப்போரை அறிந்த கட்டபொம்மன் தனது படைபிரிவில் முக்கிய இடத்தை அளிக்கிறார். பின்னாளில் இராமநாதபுரத்தில் ஏற்படும் கலவரத்தில் சுந்தரலிங்கமே ஒரு வெள்ளையரை வீழ்த்தி கட்டபொம்மனுக்கு ஏற்பட்ட இழுக்குகளை நீக்குவதாக தமிழவேள் என்னும் ஆய்வாளர் நாட்டுபுற பாடல்களை கொண்டு உறுதி செய்கிறார். மேலும் பல ஆய்வாளர்கள் தானாதிபதிதான் வெள்ளையரை கொன்றார் என்றும், மேலும் பல ஆய்வாளர்கள் மற்றவர் (வெள்ளையன்) என்பதால் குழப்பநிலை உள்ளது.

இதன்பின் தான் சுந்தரலிங்கம் துணை படை தளபதியாக கட்டபொம்மனால் நியமிக்கபடுவதாக தமிழவேள் தனது ஆய்வு மூலம் கூறுகிறார்.

ஊமைதுரையெய் பாளையங்கோட்டை சிறையில் இருந்து மீட்பதற்கு சுந்தரலிங்கமும், முத்தன், கந்தன் பகடைகள் ஈடுபட்டதாகவும், மேலும் ஏழு நாளில் கோட்டையேய் கட்டி முடித்ததாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இறுதியாக நடக்கும் விருப்பாச்சி மலையில் நடக்கும் போரில் ஊமைதுரையோடு சுந்தரலிங்கம் பிடிக்கப்பட்டு தூக்கிலிடபடுவதாக தமிழவேள் தனது ஆய்வின் மூலம் தெரிவிக்கறார். மேலும் சில ஆய்வாளர்களோ சுந்தரலிங்கமும் தனது மனைவியுமான வடிவு வோடு , கும்பினியாரின் வெடிமருந்து கிடங்குகளை ஒரு தற்கொலை முகவர்களாக சென்று அழிந்தாக சொல்லப்படுகிறது.

மேற்கோள்கள்
•நாட்டுப்புற பாடல்கள் தொகுப்பு -வானமாமலை
•பாஞ்சலகுறிஞ்சி படைத்தளபதி சுந்தரலிங்க தேவேந்திரர்- தமிழவேள்
ராமலிங்க விலாசத்தில் ஜாக்ஸன் துரையோடு நடந்த வாக்குவாதத்தில் மொழிபெயர்ப்பாளர்களால் விசுவரூபாமாகி கடைசியில் ஒரு வெள்ளையரை வெட்டிசாய்த்ததன் பிறகே கட்டபொம்மு,ஊமைத்துரை வீரர்கள் வெளியேற முடிந்தது.

ராமலிங்க விலாசப்போரில் வீரத்துடன் விளையாடி தலைகளை கொய்யும் முயற்சியில் தேவெந்திரருக்கே கிடைத்தது வெள்ளையன் தலை.

சுந்தரலிங்கத்தேவேந்திரர் கவர்னகிரிக்கு ராஜாவானாலும் கட்டபொம்மு பாளையத்துக்கு நட்பு நாடு.எனவே கட்டபொம்மனின் ஆட்சியில் சுந்தரலிங்கத்தேவேந்திரரின் அக்கறை கடைசிவரை இருந்தது.

கோட்டையை தாக்க வந்த பானர்மான் முதல் நாள் தேவேந்திரரிடம் தோற்றான்.இது வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மை.

மாவீரன் சுந்தரலிங்கம்.

சுந்தரலிங்கத் தேவேந்திரர். பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர் கட்டபொம்மனின் தளபதியாக வாழ்ந்தவர். பாஞ்சாலங்குறிச்சிப் பாளையமும் கட்டபொம்மனும் ஆங்கில ராணுவத்தால் அழித்தொழிக்கப்படுவதற்கு முன்னால், அவர்களைக் காத்து அம் முயற்சியில் தம் உயிரைத் தந்தவர் சுந்தரலிங்கம். பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள சுவர்னகிரியில் பிறந்தவர் சுந்தரலிங்கம். தந்தை கட்டக் கருப்பணத் தேவேந்திரர். தாயார் முத்தம்மாள். சுந்தரலிங்கம் பிறந்த ஆண்டு ஏறக்குறைய 1771 என்று நம்பப்படுகிறது. மனைவி சண்முகவடிவு. தம்பதிகளுக்கு இரு மகன்கள். பாஞ்சாலங்குறிச்சிக்கும், எட்டயபுரத்தும் இடையே நடந்த ஒரு ‘நதி நீர்ப் பங்கீட்டில்’தான் சுந்தரலிங்கத்தின் அரசியல் வரலாறு தொடங்கி இருக்கிறது. பாஞ்சாலங்குறிச்சிக்குச் சொந்தமான ஆற்றிலோடைக் கண்மாய் நீரை எட்டயபுரத்தைச் சேர்ந்த தருவைக்குளம் கண்மாய்க்குத் திருப்ப எட்டயபுரத்து அதிகாரம் ஆற்றிலோடைக் கண்மாயின் குறுக்கே கரை எழுப்பியபோது, அதைத் தடுத்து எட்டயபுரத்தார்களை விரட்டியடித்த வீரச் செயலால் புகழடைந்தார் சுந்தரலிங்கம். பாஞ்சாலங்குறிச்சிக்கு அவர் செய்த முதல் தொண்டு அது. இதைத் தொடர்ந்து, சுந்தரலிங்கம், கட்டபொம்முவின் படைப்பிரிவில் முக்கியப் பொறுப்பில் சேர்க்கப்பட்டுத் தன் அர்ப்பணிப்பு மிக்க வீரச் செயல்களால் தளபதி என்கிறஅளவுக்குஉயர்ந்தார். அப்போது தமிழ்நாடு 72 பாளையங்களாகப் பிரிந்திருந்தது அதில் ஒன்று பாஞ்சாலங்குறிச்சி .ஆங்கிலேயர்க்கு 1772 முதலே ஆறு ஆண்டுகளாகக் கட்டபொம்மு வரிகட்ட மறுத்தார். இந்தச் சூழலில் திருநெல்வேலி, இராமநாதபுரத்தின் ஆட்சியராக 1797-ல் நியமிக்கப்பட்ட ஜாக்சன், 26.10.1797 அன்று, உடனடியாக வரி செலுத்த வேண்டும் என்றும், தூத்துக்குடியில் முகாம் இட்டிருந்த இராணுவ அதிகாரி டேவிட்சனுக்கு உணவுக்காக ஆடுகள் அனுப்ப வேண்டும்’ என்றும் கட்டபொம்மனுக்குத் உத்தரவு பிறப்பித்தான். கட்டபொம்மன், இதைப் புறக்கணித்தார். இறுதியில் கட்டபொம்மன். ஜாக்சனைச் சந்திக்கப் புறப்படுகிறார். உடன் சுந்தரலிங்கமும், ஊமைத்துரையும் பாதுகாப்புக்குச் செல்கிறார்கள். பேட்டிக்கு வரச் சொன்ன ஜாக்சன், சுமார் 23 நாட்கள் 400 மைல்கள் அவர்களை அலையவிட்டு அவமானப்படுத்திக் கடைசியில் 10.9.1798 - அன்று மாலையில் சந்திக்கிறான். கட்டபொம்மனை நிற்க வைத்தே பல மணிநேரம் பேசி, அவரை மேலும் அவமானப்படுத்துகிறான். கட்டபொம்மன் நின்றுகொண்டிருந்தார். கைது செய்யும் சூழல் உருவாவதை கட்டபொம்மு உணர்கிறார். தண்ணீர் குடித்துவிட்டு வருவதாகக் கீழே வருகிறார். ஆங்கிலச் சிப்பாய்கள் அவரை மடியைப் பிடித்து இழுக்கிறார்கள். சில சிப்பாய்கள் கட்டபொம்மனையும், ஊமைத் துரையையும் நோக்கிச் சுடுகிறார்கள். கோட்டைக்கு வெளியே நின்றிருந்த சுந்தரலிங்கம், தன் வீரர்களுடன் கட்டபொம்மனைப் பாதுகாக்க வருகிறார். அப்போது ராணுவத் துணைத் தளபதி கிளார்க், கட்டபொம்மனைக் கொல்ல பாய்ந்து வருவதைக் கண்ட சுந்தரலிங்கம், தன் வாளால் அவனை வெட்டிச் சாய்த்தார். கட்டபொம்மன் அப்போது தப்பித்தது, சுந்தரலிங்கத் தேவேந்திரரால்தான். பாஞ்சாலங்குறிச்சிப் போரில், கட்டபொம்மனின் தோளுடன் தோளாக நின்று, கடைசிவரை அவருடன் சேர்ந்து போராடித் தம் உயிரைத் தந்தவர்கள் தேவேந்திரர்களும் பகடைகளுமே. 5.9.1799ம் தேதி பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை முற்றுகை இடப்பட்டு அன்றே தாக்கப்பட்டது. சுந்தரலிங்கத் தேவேந்திரர் தலைமையில் காலாடிக் கருப்பத் தேவேந்திரர், வீரமல்லு நாயக்கர், கந்தன் பகடை, பொட்டிப் பகடை முதலான துணைத் தளபதிகளின் வழிகாட்டுதலில் பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் ஆங்கில வீரர்களுடன் மோதினார்கள். மிகவும் உக்கிரமாக நடைபெற்ற முதல் நாள் போரில் ஐந்து முக்கிய ஆங்கிலத் தளபதிகள் கொல்லப்பட்டார்கள். ஆங்கிலப் பகுதிக்குப் பெரும் சேதம் விளைந்தது. மறுநாள் 6-ம் தேதி இரவு கட்டபொம்மன், தன் தம்பி ஊமைத்துரையோடு கோட்டையைவிட்டு வெளியேறி, படை திரட்டும் பொருட்டுக் கோலார்பட்டிக்குச் செல்கிறார். மறுநாள் கோட்டை இடித்துத் தள்ளப்படுகிறது. அரண்மனைக்குள் ஆங்கிலேயர்கள் கொள்ளையடிக்கிறார்கள். ஆயிரக்கணக்கான தேவேந்திரர்கள், அதே அளவு அருந்ததியர்கள். களத்தில் பலியானார்கள் என்பது வரலாறு அதே சமயம் கோலார்பட்டியில் இருந்து கொண்டு படைதிரட்டிக் கொண்டிருந்த கட்ட பொம்மனையும் ஊமைத் துரையையும் எட்டயபுரம் படையும், ஆங்கிலேயர் படையும் சுற்றிக்கொண்டது. கட்டபொம்மனும் ஊமைத்துரையும் தப்பித்து வெளியேறினர். சுந்தரலிங்கம்தலைமறைவாகிறார். கட்டபொம்மனைக் கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. சிவகங்கை வட்டத்தைச் சேர்ந்த திருக்களம்பூர் அருகில் கலியபுரம் எனும் இடத்தில் 23.9.1799 அன்று தொண்டைமான் ஆட்கள் கட்டபொம்மன், ஊமைத்துரை, மைத்துனர்கள் இருவர் மற்றும், ஏழுபேரைக் கைது செய்கிறார்கள். 5.10.1799 அன்று அவர்கள் கயத்தாறு கொண்டுவரப்பட்டு 16.10.1799 வரை சிறையில் வைக்கப்படுகிறார்கள். 16.10.1799 அன்று காலை கட்டபொம்மு மீது விசாரணை நடத்தப்படுகிறது. தீர்ப்பை எழுதிவைத்துக்கொண்டு, விசாரணையைத் தொடங்குகிறார் பாளர்மேன். ஐந்து குற்றச்சாட்டுகளை அடுக்குகிறான். ‘ஏதேனும் கூற விரும்புகிறாயா?’ என்று கட்டபொம்மனிடம் கேட்கிறான். பாளர்மேனை அலட்சியப்படுத்துகிறார் கட்டபொம்மன். வேடிக்கை பார்க்க வந்த ஆங்கில விசுவாசிகளான எட்டயபுரம், சிவகிரிப் பாளையக்காரர்களை மிக ஏளனத்துடன் பார்க்கிறார். தூக்குமேடைக்கு மிகுந்த வீரத்துடன் நடந்து செல்கிறார் கட்டபொம்மன். கயத்தாறு பழைய கோட்டைக்கு எதிரே உள்ள புளிய மரத்தில், கட்டபொம்மன் தன் உயிரைச் சுதந்திரத்துக்கு விலையாகக்கொடுத்தார். பாஞ்சாலங்குறிச்சி போரின் அடுத்தகட்டம், ஊமைத்துரையோடு ஆரம்பமாகிறது. உண்மையில் இந்தக் காலகட்டத்தில் கதாநாயகன் சுந்தரலிங்கத் தேவேந்திரன்தான். பாளையங்கோட்டைச் சிறையில் அகப்பட்டு, தூக்குக்குக் காத்திருந்த ஊமைத்துரையையும் மற்றும் உள்ள பாஞ்சை வீரர்களையும் மிகப் பெரிய சாகசம் செய்து தப்பிக்கச் செய்தவர் சுந்தரலிங்கத் தேவேந்திரர். பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டது 1799-ம் ஆண்டு. அவருக்குப் பிறகு பாளையக்காரராகத் தம்மை அறிவித்துக்கொண்ட, அவரது தம்பி ஊமைத்துரை கொல்லப்பட்டது 1801-ம் ஆண்டு. இடையில் கழிந்த இரண்டு ஆண்டுகள் மேலும் முப்பது நாட்கள், ஆங்கிலேயருக்கு எதிராக, ஒரு சுதந்திரப் போராட்டத்தை நடத்தினார் ஊமைத்துரை என்கிற குமாரசுவாமி. ஊமைத்துரையோடு அவருக்கு நிகராக, சில வேளைகளில் மேலாகப் போர்ச் செயல்பாடுகளில் ஈடுபட்டவர், பாஞ்சாலங்குறிச்சியின் தளபதியாக இருந்த கட்ட கருப்பச் சுந்தரலிங்கத்தேவேந்திரர் என்றே வரலாறு பதிவு செய்திருக்கின்றது. இப்போதும் வெள்ளையருக்கு எதிராகப் படைகளும், நாயக்கர்களும் தேவேந்திரர்களும் கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள், ஊமைத்துரைக்கு ஆதரவாக. கயத்தாறில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டபோது (16.10.1799) ஊமைத்துரையும் அவரோடு சேர்ந்து மொத்தம் 16 பேரும் பாளையங்கோட்டைச் சிறையில், தூக்குக் கயிறை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் கைவிலங்கும், கால் விலங்கும் போடப்பட்டு மிக விழிப்பாகக் கண்காணிக்கப்பட்டனர். அதே நேரத்தில் 9.9.1799 அன்று கோல்வார்பட்டியில் நடந்த சண்டையின்போது தலைமறைவான சுந்தரலிங்கம், சும்மா இருக்கவில்லை. தலைமறைவுக் காலமான அந்த ஐந்து மாதங்களைப் பயன்படுத்திக்கொண்டு, பாஞ்சாலங்குறிச்சியின் பக்கத்தில் அவர் பிறந்த ஊரான சுவர்னகிரி, பசுவந்தனை, பட்டணமருதூர் முதலான ஊர்களில் தேசப்பற்றும் (தேசம் என்பது அந்தக்காலத்தில் பாஞ்சாலங்குறிச்சிதான்), போர் ஆர்வமும் கொண்ட இளைஞர்களைத் திரட்டி படையாக்கிப் போர்ப் பயிற்சி கொடுத்தார். இப்படியாகச் சிறுபடையைத் தயார்செய்து கொண்டிருந்த சுந்தரலிங்கம், பாளையங்கோட்டை சிறையை உடைத்து ஊமைத்துரை மற்றும் குழுவினரையும் மீட்கத் திட்டமிடத் தொடங்கினார். சிறையிலிருக்கும் ஊமைத்துரைக்கும் சுந்தரலிங்கம் முதலான புரட்சிக்காரருக்கும் பாலமாக இருந்து பெரும்பணி செய்தவர். பொட்டிப் பகடை. ஊமைத்துரைக்கு உணவு கொண்டு போய் கொடுக்கும் பணியில் இருந்த பொட்டிப் பகடை, ஊமையன் குழுவினர் சொல்வதைப் புரட்சிக்காரர்க்கும், இவர்கள் திட்டத்தை ஊமையனுக்கும் சொல்லி வந்து, சிறை உடைப்புக்கு உருவம் கொடுத்தார். வெளியில் இருந்த புலிக்குட்டி நாயக்கரும் உதவி செய்யதார் பாளையம்கோட்டை சிறை உடைப்பு 1801-ஜனவரி இரண்டாம் தேதி என்று முடிவு செய்யப்பட்டது. சுமார் 200 புரட்சியாளர்கள், நெல்லை-பாளையங்கோட்டை சாலையில் திருச்செந்தூர், முருகனுக்குக் காவடி எடுப்பதுபோல, காவடிகளைத் தம் தோளில் வைத்துக்கொண்டு சிந்துப் பாடல்கள் பாடியபடி வந்தார்கள். இடுப்பில் மஞ்சள் துண்டு கட்டிக்கொண்டு, மந்திரங்கள் ஓதியபடி பக்தர்களுக்குத் திருநீறு அளித்துக்கொண்டு நடந்தார்கள். முன்னரே அங்கிருந்த வீரர்களுடன் சங்கேதச் சொற்களில் உரையாடியபடியும் பாளை சிறைச்சாலைக்கு முன்பாக நடந்து இடத்தைக் கவனித்தார்கள். அதில் பெரிய காவடி எடுத்தவராகச் சுந்தரலிங்கம் இருந்தார். இதேநாள், சிறைச்சாலையில் இருந்த ஊமையன் குழுவினர், ஒரு நாடகம் நடத்தத் தொடங்கினார்கள். சிறையில் பெரியம்மை வந்த ஒரு கைதி இறந்ததை முன்னிட்டு, ஊமையன் குழுவினரின் கை விலங்குகள் விலக்கப்பட்டிருந்தது, அவர்களுக்கு நல்ல வாய்ப்பைத் தந்தது. அதோடு, போரில் இறந்த உற்றார் உறவினர்களுக்குத் திதி கொடுக்க விரும்புவதாகவும், அதற்கான வாழைஇலை, தேங்காய், சூடம் பொங்கலுக்கான அரிசி, வெல்லம், விறகு போன்றவை வாங்க அனுமதி வேண்டும் என்று சிறையதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். விஷயம் தெய்வ நம்பிக்கை சார்ந்ததாக இருப்பதால், தனக்குத் தெய்வக் குற்றம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் அதிகாரி அனுமதி கொடுத்தார். அதே நேரம் காவடி எடுத்துக்கொண்டு வந்த சுந்தரலிங்கம் குழுவினர், விறகுகள், வாழை, பழங்கள், அரிசி, பருப்பு விற்கும் வியாபாரிகளாக உருமாறினார்கள். திருச்செந்தூருக்குக் காவடி எடுத்து வரும் பக்தர்கள், ஆங்காங்கே தங்கிப் பொங்கிச் சாப்பிடுவது யாதார்த்தம் ஆனதாலும், இம்மாதிரி வியாபாரிகள் அங்கு திரிவது இயல்பானது என்பதாலும், சிறை அதிகாரி, ‘இந்த’ வியாபாரிகளை விகற்பமாக நினைக்கவில்லை. அதோடு, சிறை அதிகாரி, அந்த வியாபாரிகளைச் சிறைக்குள் அனுமதித்தார். சிறைக்குள் புகுந்த வியாபாரிகள் ஊமையனின் சைகையைப் பெற்றவுடன், அந்தச் சமயத்தில் சிறைக்குள் இருந்த இருட்டைப் பயன்படுத்திக்கொண்டு, விறகுச் சுமைக்குள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை வெளியே எடுத்தார்கள். சிறைக்குள் அடுத்து ஏற்பட்ட சண்டையில் சிறைக்கதவு உடைக்கப்பட்டு, ஊமையன் குழுவினர் வெளியேறினர். சுந்தரலிங்கத்தேவேந்திரர் மற்றும் புரட்சியாளர்கள், ஜனவரி 2-ம் தேதியைத் தேர்ந்தெடுத்தமைக்கான காரணம், அன்று ஆங்கில அதிகாரி மெக்காலே வீட்டில் மாலை நடந்த விருந்துக்கு, இருபது அதிகாரிகளும், அவர்களது பாதுகாப்புக்கு நிறைய சிப்பாய்களும் கலந்துகொண்டிருந்தார்கள். சிறை பாதுகாப்பு பலவீனப்பட்டிருந்தது. ஊமையன் குழுவும், சுந்தரலிங்கம் வீரர்களும் நேராகப் பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்து சேர்ந்தார்கள். ஆங்கிலேயரால் இடித்துப் பாழ்பட்ட கோட்டையை மீண்டும் ஆறே நாளில், கட்டி எழுப்பினார்கள். சுமார் 500 அடி உயரமும் நீளமும், 200 அடி அகலமும் கொண்ட கோட்டை. கோட்டைச் சுவரின் உயரம்12அடிகள். கோபம் கொண்ட ஆங்கிலப்படை மீண்டும் பஞ்சகுறிச்சி கோட்டைமீது படையெடுப்பை தொடங்கினார்கள். கயத்தாற்றை நோக்கி ஆங்கிலபடைகள் புறப்பட்டன. குலைய நல்லூரிலும் மற்றும் பல ஊர்களிலும் ஊமையனின் கெரில்லா முறைத் தாக்குதலில் பெரும் நஷ்டங்களைச் சந்தித்தது ஆங்கில படை. தொடக்கத்தில் ஊமையன் சில குறிப்பிடத்தகுந்த வெற்றிகளைப் பெற்றார். என்றாலும் ஆங்கிலப் படை பலம், பீரங்கிகள் போன்ற நவீன ஆயுதபலம், தமிழ் நிலத்தில் நிலைபெற்றிருக்கும் துரோக பலம் ஆகியவற்றின் உதவியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை 24.5.1801-ல் வீழ்ந்தது. ஊமைத்துரையும் சுந்தரலிங்கமும் தப்பித்து வெளியேறினார்கள். பகடைகளும், தேவேந்திரர்களும், நாயக்கர்களும் இரத்தத்தாலும், வியர்வையாலும் கட்டிய கோட்டைசிதைந்தது. போரிட்டுக் கொண்டே சென்றதில் பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் கோட்டைக்கு வெளியே சிதறிக் கிடந்தனர். கோட்டையில் இருந்து மூன்று கல் தொலைவில் இருந்த சுவர்னகிரிக்கு அருகில் ஊமையனும், சுந்தரலிங்கம், வேறு பலரும் வெட்டுக் காயங்களுடன் மண்ணில் கிடந்தனர். வீழ்ந்துக்கிடந்த வீரர்களின் மத்தியில் சுந்தரலிங்கத்தைக் கண்டுபிடித்தார், சுந்தரலிங்கத்தின் தாயாரான முத்தம்மாள். சுந்தரலிங்கம், தன் தாயிடம் ‘என்னை விடு, பக்கத்திலே கிடக்கும் சாமியைக் (ஊமைத்துரை) காப்பாற்றும்மா’ என்று சொல்லி இருக்கிறார். முத்தம்மாள் இருவரையுமே, தன் வீட்டுக்கு எடுத்து வந்து, காயங்களுக்கு மருந்திட்டுக் காப்பாற்றி இருக்கிறார். உடல் நிலை தேறியதும், ஊமைத்துரையும் சுந்தரலிங்கமும், மருது சகோதரர்களின் உதவியைப் பெற சிறுவயலுக்குச் சென்றார்கள். ஊமையனுக்கு அடைக்கலம் கொடுத்தமைக்காக, ஆங்கிலேயர்கள் சிவகங்கை மேல் படையெடுத்தது. மருது சகோதரர்கள் மற்றும் ஊமைத்துரை, சுந்தரலிங்கம் ஆகியோர் அணிதிரண்டு போரிட்டார்கள். நான்கு மாதங்கள் தொடர்ந்த இந்தப் போரின் இறுதி, மிக்க சோகத்தில் முடிந்தது. மருது சகோதரர்கள் தூக்குக் கயிற்றில் தங்கள் சுதேச மானத்தை எழுதினார்கள். விருப்பாட்சியில் ஊமையனும், சுந்தரலிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலங்குறிச்சி பீரங்கி மேட்டில் வைத்து, 16.11.1801 அன்று ஒரே நாளில் ஒரே இடத்தில் தூக்கிலிடப்பட்டார்கள். ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிரானபோர் பாஞ்சாலங்குறிச்சியைப் பொறுத்தவரையில் ஒரு முடிவுக்கு வந்தது. மாபெரும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தமிழ் நிலத்துப் போர், தமிழர்கள் பெருமைப்படும் விதத்திலேயே நடந்து முடிந்தது. பாஞ்சாலங்குறிச்சிப் போரில் முக்கியமானவர்களாக, கட்டபொம்மன், ஊமைத் துரை, சுந்தரலிங்கம், சிவத்தையா, தானாபதிப்பிள்ளை, தாலாடி கருப்பணர், கந்தன் பகடை, முத்தன் பகடை, பொட்டிப் பகடை ஆகியோரே முக்கியமானவர்கள். பாஞ்சாலங்குறிச்சிப் போரில் முதல் களப்பலியே துணைத் தளபதி கந்தன் பகடை தான். பாஞ்சாலங்குறிச்சி வரலாற்றில் வெள்ளையத் தேவன், வெள்ளையம்மாள் இருவரும் புனைப் பாத்திரங்கள் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள் பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் பற்றிய கதைப் பாடல்கள், அவர்கள் அனைவரும் மறைந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகே, அதாவது 1850க்குப் பிறகே உருவாக்கப்படுகின்றன. 1847-ம் ஆண்டு, ஆங்கில அரசு அடிமை முறையை ஒழித்த பிறகே, இந்தக் கலை இலக்கியங்கள் வெளிப்படத் தொடங்கின. நாட்டுப் புலவர்கள், தங்களுக்கு வந்து சேர்ந்த நிகழ்ச்சிகளின் புரிதல் அடிப்படையில் மட்டுமே அல்லாது, அவர்கள் காலத்து ஊரின் பாடப்படும் இடத்தின் சாதி மேலாண்மைக்கு இசையத் தம் பாடல்களைப்பாடி இருக்கிறார்கள். கட்டபொம்மனின் படையில் அதிக அளவு வீரர்கள், தாழ்த்தப்பட்ட. சமுதாயத்தை சார்ந்தவர்களே என்று வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்கிறார்கள். ஆனால் இன்று புனை பாத்திரங்களான வெள்ளையத் தேவன், வெள்ளையம்மாளுக்கு வரலாற்றில் முக்கியத்துவம் கொடுக்கும் மேலாஆதிக்க தமிழகரசுகள் கட்டபொம்மனின் உண்மையான தளபதிகளான சுந்தரலிங்கத் தேவேந்திரர், கந்தன் பகடை, முத்தன் பகடை, பொட்டிப் பகடை மற்றும் அவர்களோடு நின்று ஆங்கிலேயனை எதிர்த்து போரிட்ட தலித் மக்களை வரலாற்றில் இருந்து முழுமையாக புறக்கணித்துவிட்டது என்பது கசப்பான உண்மையே. 10.9.1798 - அன்று நடந்த பேச்சு வார்த்தையின்போது கட்டமொம்மனை சதித்திட்டம் செய்து ராணுவத் துணைத் தளபதி கிளார்க், கொலைசெய்ய முயர்ச்சித்தபோது, தன் வாளால் அவனை வெட்டிச் சாய்த்து. கட்டபொம்மனை காப்பற்றினார் தேவேந்திரனார் அப்போது கட்டபொம்மன் தப்பித்தது, சுந்தரலிங்கத் தேவேந்திரரால்தான். பாளையம்கோட்டை சிறையில் தூக்கு தண்டனை எதிர்பார்த்திருந்த மாவீரன் ஊமைதுறையை 1801-ஜனவரி இரண்டாம் தேதி சிறையை உடைத்து வெளிக்கொண்டுவந்தவர் வீரன் சுந்தரலிங்கத் தேவேந்திரர் தான். இப்படி பஞ்சலகுரிச்சி வீரர்களோடு மட்டுமல்ல மருது சகோதர்களோடும் இணைந்து ஆங்கிலேயனுக்கு எதிராக இறுதிவரை போராடி வீரசாவடைந்த அந்தமாவீரனுக்கு இந்த அரசுகள் செய்த மரியதைஎன்ன தெரியுமா? பேருந்துகளுக்கு அவர் பெயர்வையுங்கள். என கோரிக்கை வைத்ததற்காக ஒட்டுமொத்த தமிழக பேருந்துகளின் பெயரயும் மாற்றியதே இந்த அரசுகள் அவருக்கு செய்த மரியாதை. இந்த இடத்தில் ஒன்றை சொல்லிக்கொள்ளவிரும்புகிறேன். இந்தியாவில் தலித் மன்னனாக இருந்தாலும் சரி, சராசரி மனிதனாக இருந்தாலும் சரி. அவன் சாதனைகள் வரலாற்றில் மறைக்கபடும். என்பதற்கு தமிழகத்தில் பேருந்துகளுக்கு சுந்தரலிங்கனார் பெயரா? என்பதற்காக எல்லா பேருந்துகளின் பெயர்களின் மற்றபட்டதே உண்மையான சாட்சி.

தியாகி இம்மானுவேல் சேகரன் குரு பூஜை…. இக்கட்டில் தி.மு.க.!

கடந்த 11-ம் தேதி நடந்து முடிந்த இம்மானுவேல் சேகரனின் குரு பூஜை நிகழ்ச்சி தி.மு.க.வுக்கு எதிரான சலசலப்புகளை ஏற்படுத்திவிட்டது. தென் மாவட்டங்களில் உள்ள தேவேந்திர குல, தாழ்த்தப்பட்ட மக்களின் அபரிமித ஆதரவை அள்ளும் வகையில் புதிய தமிழகம் கட்சியைக் கூட்டணியில் சேர்த்துக்கொண்ட அ.தி.மு.க., இம்மானுவேல் நினைவு நாள் சலசலப்புகளைத் தங்களுக்கு சாதகமாக்கத் திட்டமிட்டு இருக்கிறது. வழக்கத்துக்கு மாறாக, இந்த முறை தி.மு.க.வினர் முதல் ஆளாக இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்தனர். அமைச்சர் சுப.தங்கவேலன் தலைமையில் ரித்தீஷ் எம்.பி., முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி உள்ளிட்டவர்கள் வந்திருந்தனர். அஞ்சலி செலுத்திய சுப.தங்கவேலனிடம், “ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ஏன் அஞ்சலி செலுத்த வரலை? இந்த நிகழ்ச்சிக்குக்கூட வராமல் அப்படி என்ன அவங்களுக்கு முக்கியமான வேலை?” என ஒருவர் கோபமாகக் கேட்க… தி.மு.க.வினருக்கு சுள்ளென்று ஆகிவிட்டது. கேள்வி கேட்ட நபரை முறைத்தபடி அங்கிருந்து அகன்றார்கள். ஆண்டுதோறும் அ.தி.மு.க. சார்பில் அஞ்சலி செலுத்த முன்னாள் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கருப்பசாமியும் மாவட்ட நிர்வாகிகள் சிலருமே வருவார்கள். ஆனால், இந்த முறை புதிய தமிழகம் தங்கள் அணியில் இணைந்ததால், முன்னாள் அமைச்சர்கள் நயினார் நாகேந்திரன், ராஜ கண்ணப்பன், அன்வர் ராஜா உள்ளிட்ட மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையும் கருப்பசாமியுடன் அனுப்பிவைத்தது அ.தி.மு.க. தலைமை. இவர்களுடன் கணிசமான தொண்டர்களும் சேர்ந்து இம்மானுவேல் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதைக்கண்ட தேவேந்திர குல மக்களிடையே தாங்க முடியாத பூரிப்பு! விழா அழைப்பினர், “இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவிக்க அ.தி.மு.க. குரல் எழுப்ப வேண்டும்” என முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனிடம் கோரிக்கை வைத்தனர். “அம்மாவின் அனுமதியுடன் உங்கள் கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவோம்!” என நயினார் சொல்ல…. அங்கே இருந்த மக்கள் ஆரவாரமாகக் கைதட்டினார்கள். தாரை தப்பட்டை முழங்க அழைத்து வரப்பட்டார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. “15 ஆண்டுகளுக்கு முன் கவனிப்பு இல்லாமல் கிடந்த இம்மானுவேல் நினைவிடத்தை புதிய தமிழகம் நடத்திய மாநாடுதான் அடையாளம் காட்டியது. அதன் வளர்ச்சி இன்றைக்கு அரசு விழாவாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வரை சென்றுள்ளது. நாம் எல்லோரும் இதைப் பல ஆண்டுகளாகக் கோரி வருகிறோம். ஆனால், கருணாநிதி அரசு கண்டுகொள்ளவில்லை. தி.மு.க. அரசு இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவிக்கவும் போவதில்லை. இன்னும் ஆறு மாதங்கள் பொறுத்திருங்கள். அடுத்தது அம்மாவின் ஆட்சிதான். அம்மாவின் ஆட்சியில் நமது கோரிக்கை நிச்சயம் நிறைவேறும். அதற்கு தி.மு.க. கூட்டணியைத் தோற்கடிக்க நாம் சபதம் எடுக்க வேண்டும்…” எனப் பேசிக்கொண்டே போக… மொத்தக் கூட்டமும் ஆரவாரித்தது. இது குறித்துப் பேசும் விவரப் புள்ளிகள், “இம்மானுவேல் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க தி.மு.க. கண்டிப்பாக முயலாது. காரணம், தென் மாவட்டங்களில் இருக்கும் முக்குலத்து வாக்குகள் தங்களுக்கு எதிராகிவிடுமோ என்கிற பயம். உண்மையில், முக்குலத்து மக்கள் தங்களுக்கும் தலித் மக்களுக்கும் இடையே ஏதாவது பிரச்னை நடக்கிற நேரத்தில்தான், அரசின் நடுநிலையைக் கவனிப்பார்கள். இம்மானுவேல் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிப்பதால், முக்குலத்து மக்களுக்குக் கோபம் வராது. தி.மு.க. அரசுக்கு இது புரியவில்லை. அ.தி.மு.க.வோ இந்த விவகாரத்தைப் பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறது. இம்மானுவேல் நினைவு நாளை அனுசரிக்க முக்குலத்துப் பிரதிநிதிகளை அ.தி.மு.க. தரப்பு அதிகமாக அனுப்பியது. தலித் விரோதப் போக்கு எங்களிடம் இல்லை எனக் காட்டவே இந்த ஏற்பாடு. தலித் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற இந்த அரசு அக்கறை எடுக்காவிட்டால், அதற்கான விளைவை வரும் தேர்தலில் தி.மு.க. சந்திக்கத்தான் வேண்டும்!” என்கிறார்கள் உறுதியாக. இதை சரிக்கட்ட தி.மு.க.வின் திட்டம் என்னவோ?!

தியாகி இமானுவேல் தேவேந்திரரின் 53 வது வீரவணக்க நாள் அழைப்பு!

செப்டம்பர் 11ல் சாதி ஒழிப்புப் போராளி! தியாகி இமானுவேல் தேவேந்திரரின் 53 வது வீரவணக்க நாள் அழைப்பு. நம் தேசத்தைப் பிடித்துள்ள சாதிவெறிக் கொடுமைக்கு எதிராகப் போராடி முதல் களப்பலியான தியாகி இமானுவேல் சேகரனாரின் உயிர்த்தியாகம் தமிழகத்தில் சாதியத்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் தன்மான எழுச்சிக்கு வித்தாகவும் இன்றளவில் உரமாகவும் அமைந்துள்ளது. எழுச்சி கொண்ட சமூகம் தனது விடுதலையை நோக்கிப் பயணிக்க தியாகியின் 53 வது நினைவேந்தலில் கலந்து கொண்டு வீரவணக்கம் செய்ய அன்புடன் அழைக்கிறோம்.

நினைவேந்தலில்….

மாவீரன் விதைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி…
கருஞ்சட்டை அணிவகுப்பு…
பால்குடம்…
முளைப்பாரி…
அங்கப்பிரதிஷ்டை….
அலகு குத்துதல்…
முடி காணிக்கை செலுத்துதல்…
தியாக தீபஜோதி தொடர் ஓட்டங்கள்…
உணவு வழங்கல்…
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு…
சமூகத் தலைவர்களின் அஞ்சலி…
இயக்கத் தலைவர்களின் அஞ்சலி…
அரசியல் தலைவர்களின் அஞ்சலி…

இந்நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பில் உதவும் தோழமை அமைப்புகள்:

1. மத்திய, மாநில எஸ்.சி. / எஸ்.டி. அரசு ஊழியர் கூட்டமைப்பு
2. தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம் – பரமக்குடி
3. தியாகி இமானுவேல் பேரவை
4. அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்கம்
5. புதிய தமிழகம்
6. தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு
7. மள்ளர் இலக்கிய கழகம்
8. சகோதர மறுமலர்ச்சி சங்கம் – சென்னை
9. தமிழர் மாமன்றம்
10. வீர தேவேந்திரர் பேரவை
11. தேவேந்திரர் பாதுகாப்பு மையம்
12. வன்னியர் சங்கம் தமிழ்நாடு
13. தேவேந்திர குல வேளாளர் இளைஞர் சங்கம்
14. மத்திய, மாநில எஸ்.சி. / எஸ்.டி. அரசு ஊழியர் கூட்டமைப்பு (டாஸ்மாக் பிரிவு)
15. தமிழர் தேசிய இயக்கம்
16. சுந்தரலிங்கனார் பேரவை
17. தமிழ்நாடு குறவர் பழங்குடியினர் நலச்சங்கம்
18. ஆதித்தமிழர் பேரவை
19. புரட்சி புலிகள்
20. தமிழக முன்னேற்றக் கழகம்

வீரவணக்க நிகழ்வில் அரசியல் கட்சிகள்..

21. இந்திய தேசிய காங்கிரஸ்
22. திராவிட முன்னேற்றக் கழகம்
23. அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
24. பாட்டாளி மக்கள் கட்சி
25. விடுதலைச் சிறுத்தைகள்
26. பகுஜன் சமாஜ் கட்சி
27. பாரதீய ஜனதா கட்சி
28. தேசிய முற்போக்கு திராவிட கழகம்
29. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
30. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி
31. இந்திய கம்யூனிஸ்டு கட்சி
32. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி
மற்றும் தோழமை இயக்கங்களும், கட்சிகளும்.
32.தேவேந்திரர்மறுமலர்ச்சி பேரவைசோழமண்டலம்

தெய்வேந்திரர் வரலாறு

உலகின் நாகரிகங்களை வகைப்படுத்தும் போது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் நாகரிகத்தை “நெல் நாகரிகம்” என்று கூறுகிறார்கள். இந்த நெல் நாகரிகம் தோன்றியது, வளர்ந்தது எல்லாம் தமிழகத்திலே தான். தமிழகத்தில் இந்த நாகரிகம் மள்ளர் நாகரிகம் எனப்படுகிறது. தமிழ் இலக்கியங்கள் எல்லாம் இந்த நாகரிகத்தின் தோற்றத்தையும் இந்த நாகரிகத்தைத் தோற்றுவித்தவர்கள் பற்றியும் அதன் “பண்பாடுத் தலைவர்கள்” பற்றியும் அந்தப் பண்பாடு பற்றியும் விரிவாகவும் பெருமையுடன் கூறுகின்றன. [தொகு] நெல் முதலிய வித்துக்களை கண்டுபிடித்தல் திருநெல்வேலி மாவட்டம் சங்கரநாயினார் கோவில் கோபுர வாசல் உள்புறம் கீழ்பக்கம் உள்ள கல்வெட்டு விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 14 நாள் திங்கட்கிழமையும் உத்திராடமும் பெற்ற நாள் தெய்வேந்திரக் குடும்பன் பலாத்துப்படி : முன் துவாபர யுகத்தில் உக்கிரப் பெருவழுதியும் சோழனும் சேரனும் உலகம் வறுமைப்பட்டு இருக்கின்ற காலத்திலே தெய்வேந்திரன் பக்கல் மழை கேட்கப் போனவிடத்திலே பகவானும் மனம் மகிழ்ந்து இரும் என்ன சேரனும் சோழனும் வணங்கியிருக்க பாண்டியன் தெய்வேந்திரனுடனே கூடியிருக்க, தேவேந்திரனும் வரிசை செய்தாற்போல கவடு நினைக்க. பாண்டியன் கோபித்து எழுந்து. தேவ கன்னிகை மக்கள் நாலு குடும்பத்தாரை கைப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு சென்னல் விதையும், கன்னல் விதையும் (கதலி) விதையும் பனைவிதையும் முதலான பல வித்தும் ஒரு ரிசபமும் ஒரு சாவியும் கொண்டு பூமியில் வந்தான். நால்வரில் முதல்வனுக்கு தேவேந்திரக் குடும்பப் பட்டமும் கட்டி, மூன்று பேருக்கு வாரியன், அக்கசாலை, (இளந்தாரியன்) என்று வரிசைப் பட்டமும் கட்டி ஒரு நாளையிலே 12000 கிணறு வெட்டி வேளாண்மை கண்ட படியினாலே ராஜாவும் மனம் மகிழ்ந்து வெள்ளானையும் வெள்ளை வட்டக் குடையும் சேறாடியும் பகல் பந்தம் பாவாடை ரெட்டைச் சிலம்பும் ரெட்டைக் கொடுக்கும் நன்மைக்கு “ 16 பந்தக்காலும் துன்மைக்கு 2 தேரும் பஞ்சவன் விருந்தும் . . . . . 18 மேளமும் கட்டளையிட்டு நடக்கிற காலத்திலெ . . . . . ” −- தென்னிந்திய கோயிற் சாசனங்கள்ஃ பாகம் ஐஐ எண் 863ஃ பக்கம் 803 துவாபர யுகம் என்பது கி.மு. 3102 க்கு முற்பட்ட பல ஆயிரம் ஆண்டுகளைக் கொண்ட ஊழி. நெல், கரும்பு, வாழை, பனை முதலிய வித்துக்களையும் நீர்ப் பாசனத் தொழில் நுட்பத்தையும் முதன் முதலில் துவாபர யுகத்தில் கண்டுபிடித்த பாண்டிய வேந்தர் வம்சத்தைச் சேர்ந்த மள்ளர், குடும்பர் எனும் தேவேந்திர குலத் தமிழர்கள் பற்றிய செய்தியை மேலே காட்டப்பட்ட கல்வெட்டு கூறுகிறது. [தொகு] தமிழ் நில வகைகள் தமிழர்கள் மக்களின் வாழ்விடங்களை நான்கு வகைகளாகப் (திணை) பிரித்தனர். இவை குறிஞ்சி, முல்லை, மருதம், மற்றும்நெய்தல் எனப்பட்டன. குறிஞ்சி நிலம் என்பது மலையும் மலை சார்ந்த நிலமும் ஆகும். முல்லை நிலம் என்பது காடும் காடு சார்ந்த நிலமும் ஆகும். மருத நிலம் என்பது நீர் வேளாண்மை செய்யப்படும் வயலும் வயல் சார்ந்த நீர் வளம் மிகுந்த நிலம் ஆகும். நெய்தல் என்பது கடலும் கடல் சார்ந்த கடலை ஒட்டிய மணல் பரந்த நிலமும் ஆகும். [[பாலை நிலம் என்பது குறிஞ்சி நிலமும் முல்லை நிலமும் மழையின்மையாலும் கதிரவனின் வெப்பத்தாலும் காய்ந்து வரண்டு திரிந்த நிலம் ஆகும். [தொகு] உலக நாகரிகஙகள் ஆற்றுப் பள்ளதாக்குகள் மற்றும் ஆறு பாயும் சமவெளிகள் மருதநிலப் பகுதிகள் ஆகும். உலகின் பல நாடுகளிலும் நீர் வளம் மிகுந்த நதிக் கரைகளில் அமைந்த இந்த மருத நிலப் பகுதிகளிலெயெ நாகரிகங்கள் தோன்றியுள்ளன. கி.மு. 3400 வாக்கில் தோன்றிய எகிப்திய நாகிகம் நைல் நதிச் சமவெளி நாகரிகம் ஆகும்.கி.மு. 3500 வாக்கில் தோன்றிய சுமேரிய நாகரிகம் யுப்ரட்டீஸ், டைகீரீஸ் நதி சமவெளி நாகரிகம் ஆகும். கி.மு. 3000 வாக்கில் தோன்றியது சிந்து நதிச் சமவெளி நாகரிகம் ஆகும். கி.மு. 1600 வாக்கில் தோன்றியது சீன மஞ்சள் நதிச் சமவெளி நாகரிகம் ஆகும். கி.மு. 2500 வாக்கில் தோன்றிய கிரேக்க நாகரிகமும் நதிச் சமவெளி நாகரிகம் ஆகும். கி.மு. 1000 வாக்கில் தோன்றியது கங்கை நதிச் சமவெளி நாகரிகம் ஆகும். இப்படிப் பல நாடுகளிலும் நாகரிகங்கள் தோன்றியது ஆற்றுச் சமவெளிப் பகுதிகளான மருத நிலங்களில் தான். [தொகு] தமிழர் நாகரிகம் காவிரி, தென்பெண்ணை, பாலாறு, பவானி, அமராவதி, வைகை, தாமிரபரணி, பொருணை மற்றும் கடல் கொண்ட பஃறுளி ஆற்றுச் சமவெளிகளான மருத நிலத்தில் தோன்றிய தமிழர் நாகரிகம் “நெல் நாகரிகம்” எனப்படும். இந்த நெல் நாகரிகத்தைத் தோற்றுவித்த தமிழர் மள்ளர் எனப்பட்டனர். இந்த நெல் நாகரிகம் தமிழகத்தில் தோன்றி தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பரவியது. [தொகு] தொல்காப்பிய வேந்தன் தமிழகத்தில் மருத நிலத்தில் முதன் முதலில் மள்ளர்களால் நெல் கண்டுபிடிக்கப்பட்டு விளைவிக்கப்பட்ட காலத்தில் குடும்பம், ஊர், பேரூர், நகரம், நாடு, அரசுகள் தோன்றின. நெல் நாகரிகத்தின் பண்பாட்டுத் தலைவன் இந்தப் பண்பாட்டினை உடைய மக்களுக்குத் தலைவனானான். தமிழ் இலக்கியங்களில் நமக்குக் கிடைக்ககூடிய மிகப் பழமையான நூலான தொல்காப்பியம் இந்தப் பண்பாட்டுத் தலைவனை வேந்தன் எனக் கூறுகிறது. இந்நூலில் இந்தப் பண்பாட்டுத் தலைவனான வேந்தன் கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்ட மிகவும் வளர்ச்சி அடைந்த நிலையைக் கூறுகிறது. “ வேந்தன் மேயத் தீம்புனல் உலகமும் ” −– தொல்காப்பியம் – பொருளதிகாரம் நெல் நாகரிகம் தோன்றிய மருத நிலத்தின் கடவுள் வேந்தன் எனக் கூறுகிறது. தொல்காப்பிம் தோன்றியது கி.மு. 500 என்று கூறப்படுகிறது. ஆகையால் இந்த நெல் நாகரிகம் அதற்கும் பல நூற்றாண்டுகள் முன்னமேயே தோன்றி இந்நிலைக்கு முதிர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பின்பு நெல் நாகரிகத்தைதத் நமது பண்பாடாகக் கொண்ட மருத நில மள்ளர்களின் பண்பாட்டுத் தலைவர்கள் பலரும் வேந்தன்-வேந்தர் எனப்பட்டனர். இப்பண்பாட்டுத் தலைவர்களான தமிழக அரசர்கள் தமிழ் மூவேந்தர் சேர வேந்தன், சோழ வேந்தன், பாண்டிய வேந்தன் எனப்பட்டனர். மருத நில இறைவனான (அரசனான) வேந்தனின் வழித் தோன்றல்கள் தாம் மள்ளர் குல சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள். [தொகு] பாண்டியன் வேந்தன் பாண்டியன் நெடுஞ்செழிய மள்ளரை வேந்தன் என்றதும் அவனுடைய நீண்ட மதில் கொண்ட மதுரையை மல்லன் மூதூர் என்றதும் அவன் நெல்லின் மக்களின் குலத்தைச் சார்ந்தவன் என்பதும் பின்வரும் பாடல்களால் அறியலாம். “ வானுட்கும் வழ நீண்டமதில் மல்லன் மூதூர் வய வேந்தெ. ” −- புறநானூறு – 18,குடபுலவியனார் பாடியது. “ சீர் சான்ற உயர் நெல்லின் ஊர் கொண்ட உயர் கொற்றவ ” −- மதுரைக் காஞ்சி வரி 87 – 88, மாங்குழ மருதனார். (பாண்டிய வேந்தர் தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ் செழிய மள்ளரைப் புகழ்ந்து பாடியது). “ பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர் குப்பை நெல்லின் முத்தூறு தந்த கொற்ற நீன்குடைக் கொடித் தேர்ச் செழிய ” −- புறநானூறு 24 மாங்குடி மருதனார் தலையாலாங்காத்துச் செருவென்ற நெடுஞ்செழிய மல்லரைப் பாடியது. [தொகு] சோழ வேந்தன் சோழன் குளமுற்றுத் துஞ்சிய கிள்ளி வளவன் மள்ளரை வெள்ளைக்குடீ நாகனார் தமிழ் மூவெந்தருள்ளும் சிறந்த வேந்தர் எனப் பாடியது. “ மண்திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர் முரசு முழ ங்கு தானை மூவருள்ளும் அரசெனப்படுவது நினதே பெரும ஆடுகட் கரும்பின் வெண்பா நுடங்கும்; நாடெனப்படுவது நினதே யத்தை, ஆங்க நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தெ. ” −- புறநானூறு 35. வெள்ளைக் குழ நாகனார் கிள்ளி வளவன் மள்ளரைப் பாடியது. “ சாலி நெல்லின் சிறை கொள் வேலி ஆயிரம் விளையுட்டு ஆக காவிரி புரக்கும் நாடு கிழவோனே. ” −- பொருநர் ஆற்றுப் படை வரி 246 – 248. கரிகாற் பெருவளவந்தான் மள்ளரைப் புகழ்ந்து பாழயது. [தொகு] சேர வேந்தன் சேரன் வேந்தன் பாலை பாழய இளங்கோ மள்ளரை ஏருடைய வேந்தன் என்றது. “ விண்பொருபுகழ் விறல் வஞ்சிப் பாடல் சான்ற விறல் வேந்தனும்மெ வெப்புடைய வரண் கடந்து தும்புறுவர் புறம் பெற்றிசினே புறம் பெற்ற வயவேந்தன் மறம் பாழய பாடினியும்மே ஏருடைய விழுக் கழஞ்சிற் சீருடைய விழைபெற்றிசினே ” −-புறநானூறு 11, பேய்மகள் இளவெயினி பாடியது. “ உழுபடையல்லது வேறு படையில்லை திருவில் அல்லது கொலை வில் அறியார் நாஞ்சில் அல்லது படையும் அறியார். ” −(நாஞ்சில் – கலப்பை) – புறநானூறு 20, குறுங்கோழியார் கிழார் பாடியது. (சேர வேந்தர் யானைகட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை மள்ளர் பற்றி). கேரள மாநிலம், வயநாடு பகுதியில் 2000 ஆண்டு பழமையான எடக்கல் குகைக் கல்வெட்டு சேரவேந்தன் விஸ்ணுவர்மன் குடும்பர் குலத்தினன் எனக் கூறுகிறது. “ “விஸ்ணுவர்மம் குடும்பிய குல வர்த்த நஸ்ய லிகித”. ” இதன் பொருள் – விஸ்ணுவர்மனின் குடும்பம்; குலம் வளர எழுதியது என்பதாகும். குடும்பன் என்பது மள்ளர்களில் பட்டப் பெயர்களில் ஒன்றாகும். தேவேந்திர குலத்தினரின் உயர்வு (வேந்தன் குலத்தினர்) இந்த வேந்தர்கள் மள்ளர் குலத்தினர் என்பது சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் கூறப்படுகின்றன. வேந்தன் பின் நாளில் இந்திரன், தேவேந்திரன் எனப்பட்டதால் இவர்களும் – இவர்களின் வழித்தோன்றல்களும் தேவேந்திர குலத்தினர் என்றும் கூறப்படுகின்றனர். சேர, சோழ, பாண்டியர்கள் வேந்தர்கள் என்பதையும் அவர்கள் நெல் நாகரிகத்தின் பண்பாட்டுத் தலைவர்கள் என்பதையும் இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இந்த நெல் நாகரிகத்தின் தலைமக்களாகிய உழவர்களும், மல்லர் குலத்தினரும் – தேவேந்திர குலத்தினரும் இருந்த சிறப்பை, முதன்மையை கீழ்வரும் பாடல்கள் காட்டுகின்றன: “ உண்டி கொடுத்தோ ருயிர்கொடுதோரே உண்டி முதற்றே யுணவின் பிண்டம் உணவெனப்படுவது நிலத்தொடு நீரே ” −- புறநானூறு – 18, குடபுலவியனார் பாடியது. “ சுழன்றும் ஏர்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவெ தலை. ” −- திருக்குறள் 1031. “ உழதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர். ” −-திருக்குறள் 1033. மருத நில மக்கள் மள்ளர், உழவர், களமர், கடைஞர், வினைஞர், களைஞர், கம்பளர், தொழுவர், கடைசியர்,காலாடி, ஆற்றுக்காலாட்டியர் எனப்பட்டனர். உழவுத் தொழிற் தலையாகிய தொழிலாகவாகவும் உழவர்கள் தலை மக்களாகவும் போற்றப்பட்டனர். மன்னர்களும் வேந்தர்களும் மள்ளர் என்றும் உழவர் என்றும் பெருமைப் படக் குறிப்பிடப்பட்டனர். பிற தொழில்களில் உள்ள சாதனையாளர்களும் உழவர்களாக மேன்மையடைந்ததாகக் கூறப்பட்டனர். அதனாலேயே ஏருழவர், சொல்லெருழவர், வாளெருழவர், வில்லேருழவர் என்ற சொற்றொடர்கள் இலக்கியங்களில் ஆளப்பட்டன. உழவர், வீரர், மன்னர் என்ற மூன்று சொற்களுக்கும் பொருள்படுவதாக மள்ளர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இம்மூவரும் மள்ளர் குலத்தினராதலால் மள்ளர் என்பதற்கு இலக்கணமாக “ "அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்" ” −- என்று திவாகர நிகண்டும். “ "செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப" ” −- என்று பிங்கல நிகண்டும் கூறுகின்றன. நெல் நாகரிகத்தில் பண்பாட்டுத் தலைவர்கள் மற்றும் அவர்களின் சுற்றுத்தார் தமது செல்வ வளத்தாலும் படை வலிமையாலும் பிற நில மக்களுக்கும் தலைவர்களாக (இறைவனாக) இருந்தார்க்ள. இதனைத் தொல்காப்பியம். “ "மாயோன் (திருமால்) மேய காடுறை (முல்லை) உலகமும் சேயோன் (முருகன்) மேய மைவரை (குறிஞ்சி) உலகமும் வேந்தன் (தேவேந்திரர்) மேய தீம்புனல் (மருதம்) உலகமும் வருணன் மேய பெருமணல் (நெய்தல்) உலகமும்" ” −-தொல்காப்பியம். திருமால், முருகன், தேவேந்திரர், வருணன் ஆகியோர் முறையே முல்லை, குறிஞ்சி, மருதம் மற்றும் நெய்தல் நிலங்களுக்கு இறைவர்கள் எனக்கூறும். பாலை நில இறைவி கொற்றவை ஆகும். இலக்கியங்கள், புராணங்கள் இந்தப் பண்பாட்டுத் தலைவர்களின் உறவு முறைகள் பற்றி தெளிவாகக் குறிப்பிடுகின்றன. சிவன் மள்ளர். கொற்றவை எனப்படுகிற பார்வதி ஆகியோரின் குமரன் சேயோன் என்படுகிற முருகன் ஆகும். தேவேந்திரர் எனப்படுகிற வேந்தனின் மகள் தெய்வயானையின் கணவர் சேயோன் பார்வதியின் சகோதரர் மாயோன் எனப்படுகிற திருமால் மள்ளர் ஆகும். வருணன் மள்ளர் வேந்தன் எனப்படுகிற தேவேந்திரருக்குக் கீழ்பட்ட ஒரு தலைவன். மள்ளர் குலத்தினரின், தேவேந்திர குலத்தினரின், தமிழரின் இந்த நெல் நாகரிகம் தான் பல கலைகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் தோற்றுவித்து ஆதரித்து வளர்த்து மக்களிடையே பரப்பியுள்ளது. மனித குலத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும், வளத்திற்கும் பண்பாட்டு மேலாண்மைக்கும் காரணமாக அமைந்துள்ளது. மள்ளர் – தேவேந்திர குல வேளாளர் வளமை – நெல் வேளாண்மைக்கு இன்றியமையாத நீரை இம்மக்கள் வேண்ட அவர்களின் இறைவனும் மாரிக் கடவுளுமான தேவேந்திரர் கோடை காலத்திலும் கொடுப்பார் என்கிறார் பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் பெருமான். “ பிள்ளை தைவரப் பெருகுபால் சொரி முலைத்தாய்போல் மள்ளர் வேனிலின் மணல் திடர் பிசைந்து கைவருட வெள்ள நீரிரு மருங்குகால் வர்p மிதந் தேறிப் பள்ள நீள் வயல் பருமடை உடைப்பது பாலி. ” −- பெரியபுராணம், திருக்குறிப்புப் தொண்டர் நாயானார் புராணம், பாடல் 22. இவர் விளைத்துக் குவித்த வானளாவிய நெற்குன்றுகள் மருத நிலத்தைக் மலைகளடர்ந்த குறிஞ்சி நிலமாகக் காட்டியது என்கிறார் இன்னொரு பாடலில். “ கைவினை மள்ளர் வானங் கரக்க வாக்கிய நெற் குன்றால் மொய் வரை யுலகம் போலும் மளரிநீர் மருத வைப்பு. ” −- பெரியபுராணம், – திருநாட்டுச் சிறப்பு, பாடல் 25 “ “குன்றுடைக் குலமள்ளர்” ” என்னும் கம்பர் தமது இராமாயணத்தில் இவர்கள் போர்க்களத்தில் பகைவர்களின் தலைகளை வெட்டி வீழ்த்தியதை உழவு, தொளி கலக்குதல், நாற்று முடிகளைப் பரவுதல் முதலிய நிகழ்வுகளோடு ஒப்பிட்டு கூறுவார். “ நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின் உதிர நீர் நிறைந்த காப்பின் கடும் பகடு படி கிடந்த கரும் பரப்பின் இன மள்ளர் பரந்த கையில் கடு ங்கமல மலர் நாறும் முடிபரந்த பெருங்கிடக்கைப் பரந்த பண்ணை தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே எனப் பொலியும் தகையும் காண்மின் ” −- கம்பராமாயணம். வானரர் களம் – காண் படலம், செய்யுள் 25. பழனிச் செப்புப்பட்டயம் கி.பி. 1528 (மள்ளர் மலர் அக்டோபர் 1998 பக. 20 – 21). இம்மக்களின் தோற்றம்; மற்றும் வரலாறு பற்றிக் கூறும். உலக மக்களுக்கு செந்நெல் அமுது படைப்பதற்காக சிவனும் உமையும் மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர்களைப் படைத்ததார்கள். இவர்கள் இப்பூமியில் செந்நெல் தோற்றுவித்தார்கள் என செப்புப்பட்டயம் பெருமைப்பட கூறும். [தொகு] தெய்வேந்திரர் வரலாறு “ சிவனுயுமையும் மதிறுக் காஞ்சி தன்னில் ஏகாம்பரரா இருந்தருள் புரிந்து மதுரையை நோக்கி வரும் வழியதனில் உலகலாமீன்ற உமையவள் மனதில் திருவருள் தோன்றி சிவனிடத்துரைக்க அரன்மன மகிழ்ந்து முகமது வேர்க்க கரமதில் வாங்கி வரமதுக்கியந்து வைகையில் விடுக்க வருணன் பொழிந் துருழிக் காத்தடித்து குளக் கரையதனில் கொடி வள்ளல் தாங்க ஓமம் வளர்ந்து உற்ப்பணமாக ஈசுவரி தேடி யிருளில் நடக்க கூவிய சத்தம் குமரனை நோக்கி வாரிடியடுத்து வள்ளலை வலபுறம் வைத்து வலமார் பிய்ந்து அமுர்தம் பொழிந்து அ~;த்தம் கொடுக்க பாலன் நரிவு பணிவிடைக்காக புரந்தரன் மகிழ்ந்து ப+ரித்தெடுக்க. ” தெய்வேந்திரன் அன்னம் படைத்தல் : “ கன்னல் சென்னல் கதழி பிலாவுடன் தென்னை கமுகு செறந்த வெள்ளிலை அன்ன மிளகு மாந்துளிற் மஞ்சள் மல்லிகை முல்லை மகழி நுவர்ச்சி பரிமள சுகந்தம் பாங்குடன் கொண்டு தெய்வ சபையை தெரிசிக்க வென்று காராவின் பாலை கரகத்திலேந்தி சீறாக அன்னம் சிறப்பித்த போது. ” தெய்வேந்திரன் விருதுகள் : “ ஈஷ்வரன் மகிழ்ந்து இணைமுடி தரிக்க அமரர்கள் மகிழ்ந்து இணைமுடி தரிக்க அமரர்கள் மகிழ்ந்து அதிசயத் திவாகும் விமரிசையாக விருது கொடுக்க மாலயன் ருத்திரன் மகேஷ்பரன் மகிழ்ந்து பொன்முடி யதனில் பூசன மணிய வாடாத மாலை மார்பினி லிலங்க வெட்டுப் பாவாடைகள் வீணைகள் முழங்க செந்நெல் சேறாடி சிறப்புடன் சூழ வெள்ளைக் குடையும் வெங்களிறுடனே டாலுடம்மான சத்தம் அதறிட மத்தாளம் கைத்தாமம் மகெஷ்பரத் துடனெ எல்லா விருதும் இயல்புடன் கொண்டு தெய்வ சபையை தெரிசனம் செய்து பதினெட் டாயுதம் பாங்குட னெடுத்து புரவியிலேறி பூலோக மதனில் சென்னலா யெங்கும் சிற்ப்பிக்கும் போது விசுவ கண்ணாளர் மேழியும் கொடுக்க மூவராசாக்கள் முடிமணம் சூட்ட செந்நெல்லை படைத்தோர் குகவேலருளால் குடும்பன் தழைக்க சிவனரளாலே திருநீறணிந்து யெல்லா வுலகும் யிறவியுள் ளளவும் தெள்ளிமை யாத செந்நெலை படைத்தோர் சேத்துக்கால்ச் செல்வரான செந் நெல் முடி காவரலான முத்தளக்கும் கையாதிபரான பாண்டியன் பண்டான பாறதகதபரான அளவு கையிட்டவரான மூன்று கைக்குடையாதிபரான பஞ்ச கலசம் பாங்குடன் வயித்து அஞ்சலித் தேவர்கும் அன்னம் படைத்தவரான மண்ணை வெட்டிக் கொண்டு மலை தகத்தவரான கடல் கலங்கினும் மனங் கலங்காத வல்லபரான மாடக் குளத்தில் வந்துதித்தவறான பரமசிவனுக்கு பாத பணிவிடை செய்கின்றவரான தெய்வலோகத்தில் தெய்வேந்திரன் பிள்ளைகளாகிய பழனித் தலத்தில் காணியாளனாகிய கொங்குப் பள்ளரில் பழனிப் பண்ணாடி. ” −– பழனிப் பட்டயம், வரி 195 – 217. நெல் நாகரிகத்தின், நெல்லின் மக்களாகிய மள்ளர்களும் அவர்களுடைய பண்பாட்டுத் தலைவர்களுமாகிய (வேந்தன்) தேவேந்திரர், முருகன், மள்ளர், திருமால் மள்ளர், சிவன் மள்ளர், பார்வதி, சேர வேந்தர், சோழ வேந்தர், பாண்டிய வேந்தரும் அனைத்துக் தமிழ் இலக்கியங்களிலும் பலவாறு புகழ்ந்து பேசப்படுவார்கள். சங்க காலத் தமிழ் இலக்கியங்கியங்கள் தொடங்கி இன்று வரை இலக்கியங்களில் பேசப்படும் நெல்லின் மக்களாகிய மள்ளர் என்னும் தேவேந்திர குல வேளாளர்களின் பண்பாட்டு மேலாண்மை, தமிழ் வளர்ச்சிக்கும் தமிழர் முன்னேற்றத்திற்கும் அவர்கள் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. முழுமையானது. சங்க காலம் தொட்டு சென்ற நூற்றாண்டு வரை இயற்றப்பட்ட அனைத்துத் தமிழ் இலக்கியங்களும் இந்த தேவேந்திர மள்ளர்களின் புகழ் பாடும். இலக்கியங்களில் நாட்டு வளம் என்னும் படலம் நெல் நாகரிகத்தின் மேன்மையையும் அம்மக்களின் சிற்பபையும் கூறும். ஏர் மங்கலம், வான் மங்கலம், வாள் (கலப்பையில் உள்ள கொழுவு) மங்கலம் உழத்திப்பாட்டு முதலியன அரசர்களுக்கு இணையாக இம்மக்களின் சிறப்பை உயர்த்திப் பாடும். அரசர்களின் இந்நெல் நாகரிகத்தின் தலைவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்நெல் நாகரிகத்தினைத் தோற்றுவித்த மக்களின் தற்போதைய பெயர்களான மள்ளர், பள்ளர், தேவேந்திரர், தேவேந்திர குலத்தார், தேவேந்திர குல வேளாளர், பண்ணாடி, காலாடி, குடும்பன், குடையர், அதிகாரி, குடும்பனார், மூப்பனார், பணிக்கர், வாய்;காரர் (வாய் – நீர்வரும் வாய், மதகு), குளத்து மள்ளர் முதலிய பெயர்களுக்கும் தற்போதும் இம்மக்களுடைய முதன்மைத் தொழில் நஞ்செய் விவசாயம் என்பதுவும் நெல் நாகரிகத்தின் தொன்மையும் தொடர்ச்சியையும் இந்நாகரிகத்தின் பங்களிப்பையும் உணர முடியும். தமிழ் மள்ளர்களின் இந்நெல் நாகரிகம் இந்தியா முழுவதிலும் இலங்கை, தாய்லாந்து, வியட்நாம், மியான்மர் (பர்மா), பாகிஸ்தான், சீனா, சப்பான், இந்தோனேசியா, மலேசியா, கம்போடியா, பங்காள தேசம், பிலிப்பைன்ஸ் முதலிய தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதிலும் பரவியுள்ளது, இதன் சிறப்பையும் இன்றியமையாமையையும் உணர்த்துகின்றது.

புதன், 22 செப்டம்பர், 2010

•சிவில் சப்ளை அதிகாரி முருகன்தேவேந்திரர் சாவில் மர்மம் : சிபிஐ விசாரணை கோருகிறார் டாக்டர் க..கிருஷ்ணசாமி!

தூத்துக்குடி சிவில் சப்ளை அதிகாரியின் மரணத்தில் மர்ம முடிச்சுகள் இருப்பதாக கூறி சிறப்பு புலனாய்வுத் துறை விசாரணைக்கு உத்தரவு விட வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார். இது குறித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,சிவில் சப்ளை அதிகாரியின் மரணத்தில் மர்ம முடிச்சுகள் இருப்பதாக தெரிகிறது.எனவே இவ்வழக்கை சிறப்பு புலனாய்வுத் துறை விசாரணைக்கு உத்தரவு விட வேண்டும் என்றார். அவருடன் மனித உரிமை ஆர்வலர்களும்,வியாரிகள் சங்க பொது செயலாளர் நடராஜன்,பேராசிரியை பாத்திமா பாபு மற்றும் புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

திங்கள், 20 செப்டம்பர், 2010

மாமல்லர் ராஜராஜ சோழ தேவேந்திரர்


மாமல்லர் ராஜராஜ சோழ தேவேந்திரர்
சதய விழா ,அக்டோபர்15 11 2010

எம் இனத்திற்கு எதிரான துரோகிகளுக்கான எச்சரிக்கை

மானங்கெட்ட தி மு க அரசே எம் மக்கள் விழிப்படைந்து விட்டோம். இலவசத்தால் எம் மக்களை ஏமாற்றி விடலாம் என்றா நினைத்தாய்?... எம் மக்கள் சோற்றில் உப்பிட்டு உண்பவர்கள், உன்னுடைய இலவசத்துக்காக (எங்கள் வரிப்பணத்தில்..) எங்கள் இனத்தை அடகு வைக்க நாங்கள் ஒன்றும் உங்களைப்போன்ற வந்தேறிகள் அல்ல, உண்ணுவதற்கு உழைப்பையும் ஆளுவதற்கு வீரத்தையும் எம் இனப்போராளிகள் எம் நெஞ்சில் விதைத்துள்ளனர். உனது அரியணைக்கும் அறிவாலயத்துக்கும் சாவு மணி அடிக்க கிளம்பிவிட்டோம். பரமக்குடியில் நாங்கள் எடுத்த சபதம் தேவேந்திரர் ஆட்சிக்கு அடித்தளம் அமைப்பது மட்டுமல்ல எம் இனத்திற்கு எதிரான துரோகிகளை ஒழிப்பதும்தான். இது உங்களுக்கான எச்சரிக்கை.... உங்களுடைய விளம்பரத்துக்கே இந்த நிலைமை எனில் உங்களுடைய நிலைமை (?) யை பார்த்துக்கொள்ளுங்கள் ...

முதுகுளத்தூர் பயங்கரம்

1957 பொதுத்தேர்தல் அதற்கடுத்த இடைத்தேர்தல் ஆகியவற்றை ஒட்டி இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் இரு சாதிகளுக்கிடையில் கொந்தளிப்பு எழுந்தது. அதை அடக்க 1957 செப்டம்பர் 10ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடுசெய்தார். அதில் ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை அமைப்பின் இம்மானுவேல் சேகரன் அம்மக்கள் சார்பாகக் கலந்துகொண்டார். மறவர்கள் சார்பில் உ. முத்தராமலிங்கத் தேவர். கூட்டத்தில் இம்மானுவேலின் தலைமைத் தகுதி குறித்து விவாதம் எழுந்தது. இருவரும் சேர்ந்து கையெழுத்திடும் கூட்டறிக்கைக்கு முத்துராமலிங்கத் தேவர் ஒப்புக்கொள்ளாத நிலையில், ஒரே வாசகம் உள்ள தனித்தனி அறிக்கைகள் வெளியிடும் ஆட்சியரின் முயற்சியில் உருவான சமாதானத் திட்டத்தோடு கூட்டம் முடிந்தது. மறுநாள் செப்டம்பர் 11இல் இம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து இரு சமூகத்தினரிடையே எழுந்த மோதல் பல உயிர்களையும் பலிகொண்டது. சேதமான சொத்துகள் இருதரப்பிலும் இருந்தன. ஒரு மாதத்திற்கும் மேலாக இம்மோதல் நீடித்தது. வரலாற்றின் குருதி எழுதிய வரைபடமாகத் தமிழக வரலாற்றில் முதுகுளத்தூர் பதிவானது. அடங்க மறுத்ததும் திமிறி எழுந்ததுமான செயல்பாடுகளால் தலித்துகள் எழுச்சி பெற்றது உண்மை. 1957இல் முதுகுளத்தூரில் நேர்ந்த தலித் எழுச்சியைக் குறித்து அந்தக் காலகட்டத்தில் இரு நூல்கள் வெளிவந்துள்ளன. இதைக் கலவரமாகச் சித்திரித்து தினகரன் எழுதிய முதுகுளத்தூர் கலவரம் (1958), பயங்கரமாக அதை வர்ணித்து டி.எஸ். சொக்கலிங்கம் எழுதிய முதுகுளத்தூர் பயங்கரம் (1957). 50 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இவ்விரண்டு நூல்களும் அடுத்தடுத்து மறுபதிப்புக் கண்டுள்ளன. முத்துராமலிங்கத் தேவருக்கு எதிரான காங்கிரஸின் தலித் ஆதரவு நூல்களேயானாலும் இவை இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு. ஒடுக்கப்பட்ட சாதி, ஆதிக்கச் சாதிக்கு எதிராக மேல் எழும் ஒரு நிகழ்வைக் கலவரமாகப் பார்ப்பதற்கும் பயங்கரமாகப் பார்ப்பதற்குமான வித்தியாசமே அது. தினகரன் சுயசாதி அபிமானத்தையும் கடந்து தலித் ஆதரவு நிலைப்பாடெடுத்து எழுதினார். விளைவாகச் சொந்தச் சாதியினரால் கொல்லவும்பட்டார். சொக்கலிங்கத்தின் நூலிலும் தலித் ஆதரவு இழையோடுகிறது. அது காங்கிரஸ், குறிப்பாகக் காமராஜ் என்ற தறியிலிருந்து புறப்பட்ட இழையாகும். சம்பவக் காலத்தில் டி.எஸ். சொக்கலிங்கம் பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளைப் பத்திரிகையாளர் மயிலைநாதன் தொகுத்து முதுகுளத்தூர் பயங்கரம் என்னும் பெயரில் இந்நூலாக்கினார். முதுகுளத்தூர் சம்பவம், அரசியல் நிகழ்வல்ல, வகுப்புகளுக்கிடையிலான போராட்டமே என்பதை நிறுவிக்காட்டுவதே ஆசிரியரின் நோக்கம். குறிப்பிட்ட நிகழ்ச்சி, அதைத் தொடர்ந்த சம்பவங்கள், அவற்றைக் குறித்த பத்திரிகைச் செய்திகளில் படிந்துள்ள அரசியல் சாயம், அறியாமையின் தூசு, சதியின் பகுதி ஆகியவற்றை விளக்குவன நூலின் முதல் இரண்டு பகுதிகள். முதுகுளத்தூர் பகுதி நிலவரிகூட வசூலிக்க முடியாதபடி அராஜகப் பிடியில் இருந்தது பற்றிய விவரம் மூன்றாம் பகுதி. தலைவிரித்தாடிய அராஜகமும் அப்பகுதியைப் பார்வையிட வந்த மத்திய உள்துறை அமைச்சர் தத்தாரின் வருகையைப் பற்றிய விவரணையும் தொடரும் பகுதிகள். தலித்துகளின் துயர வரலாறும் சட்ட சபையில் காங்கிரஸ் கட்சிமீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானமும் அரசின் நடவடிக்கைகள் பற்றியதும் இறுதிப் பகுதிகள். இந்நூலின் முன் இணைப்பாக 'மதுரைக் கோயில் நுழைவு', 'உ. முத்துராமலிங்கம் பொய்மையால் வேயப்பட்ட காகித ஓடம்' என்னும் பதிப்பாசிரியரின் இரு கட்டுரைகளும், டி. எஸ். சொக்கலிங்கம் பற்றிய பொன். தனசேகரனின் அறிமுகக் கட்டுரையும் உள்ளன. பின்னிணைப்பாகத் தலித் தலைவர் பி. மருதையாவின் அறிக்கையும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் போது சகஜானந்தரின் சட்டசபைப் பேச்சும் அமைக்கப்பட்டுள்ளன. சம்பவ காலத்தில் எழுதப்பட்ட இப் பிரதிகளை, நிகழ்ச்சிகளை வரலாற்றில் வைத்துப்பார்க்கும் அரிய வாய்ப்பை மறுபதிப்பு செய்திருக்கும் பதிப்பாசிரியருக்குக் காலம் அளித்திருக்கிறது. அதனால் நிகழ்வுகளை அலசிக் கொள்கைரீதியான தர்க்கங்களோடு அ. ஜெகநாதன் முன்னுரை எழுதியுள்ளார். அரசியல் சூழலை விளக்கும் இன்னும் பல அம்சங்கள் தேவைப்படினும் பயனுள்ள முன்னுரை. சொக்கலிங்கத்தின் நூல் சந்தேகமில்லாமல் காங்கிரஸ் சார்பு எழுத்துகள்தாம். அவை முத்துராமலிங்கத் தேவருக்கு எதிராக இருப்பதால் தலித் ஆதரவு எழுத்துகளாகத் தோற்றம் தருகின்றன. தன் தொகுதிவாழ் மக்களின் சாதிகளைத் தம் கைப்பட எழுதிவைத்திருந்த காமராஜரின் சுயசாதி ஆதரவு நிலைப்பாட்டை, அவர் தலித்துகளை ஆதரிப்பதால் நாம் புறக்கணித்துவிட முடியாது. கட்சி அரசியலில் சாதிகளின் செல்வாக்கை மறுக்க முடியாத மோசமான நிலையை ஒப்புக்கொண்டு சொக்கலிங்கமும் வருந்துகிறார் என்பது தான் நிலைமை. அது அரசியல் கலவரமல்ல, வகுப்பு மோதல், அதுவும் ஒரு குறிப்பிட்ட சாதியினர் தம் ஆதிக்கத்திலேயே இன்னொரு சாதியினரை வைத்திருக்க விரும்பி அதன் பொருட்டு வன்முறையில் ஈடுபட்டதன் விளைவே முதுகுளத்தூர் பயங்கரம் என்பதாக இந்நூல் பேசுகிறது. ஒடுக்கப்பட்ட சாதியினர் தற்காத்துக்கொள்ள மேற்கொண்ட எதிர்ப்பு தன்னெழுச்சியாக நேர்ந்ததாகச் சொக்கலிங்கம் நூல் ஒப்புக்கொள்ளவில்லை. மாறாகக் காங்கிரஸ் சேவையின் விளைவு அது என்பதாகப் பீற்றிக்கொள்கிறது. அது காங்கிரஸ் சேவையின் விளைவென்றால் காங்கிரஸ்காரர் அனைவருக்கும் அதில் பங்கு உண்டுதானே. சொக்கலிங்கத்துக்குத் தன் காங்கிரஸ் ஆதரவு வாதத்திற்கு வலுச் சேர்க்கப் பெரியாரின் நிலைப்பாட்டையும் பாராட்ட நேர்ந்துவிடுகிறது. முதுகுளத்தூர் சம்பவத்தில் தலித்துகளின் பக்கம் பெரியார் சார்புநிலை எடுத்ததற்கு அரசியல் காரணம் கற்பிக்கும் பிந்தைய வரலாறுகளை முன் உணர்ந்தோ என்னவோ ஒடுக்கப்படும் பிரிவினர்மீது எப்போதும் கவனம் குவிக்கும் பெரியாரின் இயல்பே தலித் சார்பு நிலைக்குக் காரணம் எனச் சொக்கலிங்கம் இந்நூலில் பதிவுசெய்திருக்கிறார். பெரியார், திராவிடம் என்ற கருத்தாக்கங்கள்மீது எப்போதும் எதிர் நிலை எடுப்பவர் சொக்கலிங்கம் என்பது வரலாறு அறிந்த செய்தி. பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலும் இட ஒதுக்கீடு வேண்டுமா என்பது சொக்கலிங்கத்தின் புகழ்பெற்ற கிண்டல். திராவிடர் கழகங்களின் உயிர்மூச்சான இட ஒதுக்கீட்டையே கிண்டல் செய்த சொக்கலிங்கம் பெரியாரை வேறு வழியின்றிப் பாராட்டியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். தலித்துகளின் தன்னெழுச்சியைப் போற்றி விதந்தோத வேண்டிய இந்நூல், காங்கிரசின் தலித் நிலைப்பாடுமீது சார்புணர்ச்சி எழுமாறு உருவாகிவிட்டது. அதற்கு உதவுவதுபோல் நூலின் முன் இணைப்புக் கட்டுரைகள் இரண்டும் தலித்துகளுக்காக உழைத்ததாகக் காங்கிரஸ் பலபடப் பேசும் வைத்தியநாத அய்யரையும் ராமேசுவரி நேருவையும் (நூல் நெடுக இவர் பெயர் ராஜேசுவரி நேரு என்று பதிவாகியுள்ளது. நூலில் காணலாகும் பல பிழையான பெயர்களுடன் இதுவும் சேர்த்தி) புகழ்ந்து தள்ளுகின்றன. உணர்ச்சியின் பெருக்கில் கோபத்தின் திசைவழியில் இயங்கும் முன் இரு கட்டுரைகளின் மிகை அழுத்தம் காங்கிரஸ் சார்பு எழுத்தான இந்நூலைச் சொக்கலிங்கம் என்ற சுதந்திரப் போராட்ட வீரரின் சமத்துவ இந்தியா நோக்கிய கனவு பற்றிய எழுத்தாக நினைக்கவைத்துவிடுகின்றது. ஒரு காலகட்டத்தில் ஒருவருக்கு எதிராக இருந்தவர்கள் இன்னொரு காலகட்டத்தில் அவருக்குச் சார்பான நிலை எடுப்பது நாடாளுமன்ற அரசியலில் தவிர்க்க இயலாதது. தேவரை எதிர்த்த தினகரனோடு தோள் சேர்ந்து நின்ற ஆறுமுகம் பின்னாளில் தேவரைப் பாராட்டிப் புத்தகம் எழுதினார். சொக்கலிங்கத்தின் நிலைப் பாட்டையே அவருக்குப் பிறகும் வாழ்ந்த மயிலைநாதன் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் அது நடக்காதபோது அவரைக் குருத்துரோகி என்று சொல்வதும் மீண்டும் யோசிக்க வேண்டியவை. ஏ.கே. செட்டியார், மயிலைநாதன், தி.வ. மெய்கண்டார், அன்பு பொன்னோவியம் போன்றோர் வரலாற்றின் தொடர்ச்சிக்கு அளிக்கும் ஆவணச் சேகரிப்புப் பங்களிப்பை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. நமது விமர்சனங்கள் வரலாற்றுக்குதவும் அவர்களின் இருப்பைக் காலிசெய்துவிடக் கூடாது. அதேசமயம் சந்தர்ப்பவாதப் புத்தக வியாபாரிகளைச் சாடுவதை நாம் வரவேற்றுத்தான் ஆக வேண்டும். முதுகுளத்தூர் சம்பவத்தைப் பள்ளர்களின் விடுதலைப் போராட்டமாக மட்டும் பார்க்காமல் ஒட்டுமொத்த தலித்துகளின் எழுச்சியாகப் பார்ப்பதும் உணர்வதும் தலித் எழுச்சிப் பயணத்தில் நல்ல சமிக்ஞைகள். கடைசியாக ஒரு வார்த்தை. முதுகுளத்தூர் கலவரம் நூலில் நேர்ந்திருந்த இரண்டு தவறுகளுக்காகத் தமிழ் அறிவுலகத்திடம் இந்நூலில் மன்னிப்பைக் கோரியுள்ளார் பதிப்பு ஆசிரியர். அம்மாதிரியான தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பும் கடமையும் விமர்சகர்களுடையவை. ஆனால் விமர்சகர்கள் அவற்றை உணர்ந்திருந்தாலும் சொல்லாமல் இருந்திருக்கலாம். அதற்குக் காரணங்கள் இரண்டு: இம்மாதிரியான நூல் முயற்சிகளுக்குப் பின்னால் நிற்கும் உழைப்பு பற்றிய மதிப்பும் தங்கள்மேல் ஊற்றப்படுவதற்காகக் காத்துக்கொண்டிருக்கும் தார் டின்களின் மீதான கவனமும்.